ஆந்திர மாநிலத்தில் ஜெகன் அரசை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி போராட்டம் நடத்தவிருந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நராலோகேஷ் ஆகியோர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர் . இது ஆந்திரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் முதல்வராகப் பதவியேற்று 100 நாட்கள் ஆகியுள்ளது. ஜெகன் பதவியேற்றது முதல் தற்போது வரை தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 500 பேர் தாக்கப்பட்டுள்ளனர் என்று சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், எனவே ஆளும் அரசின் அராஜகத்தைக் கண்டித்து குண்டூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து பல்நாடு பகுதியில் உள்ள அத்மகூர் கிராமம் வரை இன்று பேரணி மற்றும் ஆர்ப்பட்டம் நடத்தப் படும் என்று அறிவித்திருந்தார்.
இதனால் அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆயினும், தடை உத்தரவை மீறி, பேரணியில் பங்கேற்பதற்காக கட்சியின் மூத்த தலைவர்களும், தொண்டர்களும் இன்று காலை தயாராகினர். இந்நிலையில், சந்திரபாபு நாயுடு வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டதாக தகவல் வெளியானது. இதனால் தொண்டர்களும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை அடுத்து சந்திரபாபு நாயுடு மகன் நரா லோகேஷ் தலைமையில் தொண்டர்கள் திரண்டனர். அவர்கள், அமராவதியில் உள்ள சந்திரபாபு நாயுடு வீட்டுக்குச் சென்ற போது, போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நராலேகேஷையும் போலீசார் வீட்டில் சிறைவைத்தனர். மூத்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களும் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டனர்.
இதை அடுத்து, மூத்த தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சந்திரபாபு நாயுடு, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தாங்கள் இருக்கும் பகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுமாறு கூறினார். இதை அடுத்து தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரவர் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர்.
இதை அடுத்து அந்தப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க குண்டூர் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திடீரென்று வீட்டை விட்டு வெளியேறி வெளியே வந்த சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். ஆத்மகூரில் பேரணி நடந்தே தீரும் என்று கூறி காரில் ஏறப் போனார். ஆனால் போலீஸார், வீட்டின் கேட்டை இழுத்து மூடினர். இதனால் வீட்டில் சிறை வைக்கப் பட்ட நிலையில் சந்திர பாபு நாயுடு உள்ளே சென்றார். இது குறித்து அறிந்ததும் தொண்டர்கள் அவர் வீட்டின் முன் பெருமளவில் குவிந்தனர்.