திமுக.,வினர் கட்சி நிகழ்ச்சிகளுக்காக பேனர் எதுவும் வைக்கக் கூடாது என்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களை எச்சரித்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து தாமாகவே முன் வந்து விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் பேனர்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் கண்டனம் தெரிவித்தது. மேலும், தமிழக அரசுக்கும் சரமாரியாக கேள்விகளை எழுப்பியது.
இந்நிலையில் திமுக நிகழ்ச்சிகளுக்காக கட்சியினர் யாரும் பேனர் எதுவும் வைக்கக் கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக நிகழ்ச்சியோ, கூட்டமோ எதுவாக இருந்தாலும் பேனர் வைத்தால் நான் பங்கேற்க மாட்டேன். உரிய அனுமதி பெற்று ஒன்றிரண்டு பேனர்களை விளம்பரத்துக்காக, பாதுகாப்பாக வைக்கலாம்.
வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைப்பதை என்னால் ஏற்க முடியாது. இந்த அறிவுரையை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் ஏற்படும் வகையில் பேனர் வைப்பதை அறவே நிறுத்த வேண்டும்… – என்று தெரிவித்துள்ளார்.