- சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவுபடி ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது
- சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
- வேறு கட்சியை சேர்ந்த 4 பேர் திமுக சின்னத்தில் போட்டியிட்டு பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கு
- தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக, அக்கட்சி சின்னங்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
- உறுப்பினராக இல்லாதவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா? – நீதிபதிகள் கேள்வி
ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் வேறோரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ், மதிமுக கணேசமூர்த்தி மற்றும் ஐ.ஜே.கே பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு பேரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்திருந்தார்.
அவர் அளித்த மனுவில், தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்தக் கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது என்றும், இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரு கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவரை அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் தேர்தலின்போது, கட்சியின் பெயர், தேர்தல் அறிக்கையை விட, சின்னமே பெரும்பங்கு ஆற்றுகிறது என்றும் சின்னத்தை வைத்துதான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்றும் கருத்து தெரிவித்த நீதிபதிகள், எனவே சின்னம் ஒதுக்கப் பட்டது குறித்து விளக்கம் தேவை என்று கூறினர்.
மேலும், தேர்தலில் வெற்றி, தோல்வியை விட நேர்மையான முறையில் போட்டியிடுவது தான் முக்கியம் என்றனர் நீதிபதிகள்!
இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், ஒரு கட்சியைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என விதி இருந்தாலும், தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டால் அதை எதிர்த்து தேர்தல் வழக்குதான் தொடர முடியும் என்றும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்றும் கூறப் பட்டது.
இதை அடுத்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக மற்றும் அக்கட்சி சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சி எம்பிகள் நவம்பர் 12-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இருப்பினும், வேறொரு கட்சியின் சின்னத்தை வேறு ஒருவருக்கு ஒதுக்கி வேட்பு மனுவை பெற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரி குறித்து எந்தக் கேள்வியும் எழவில்லை.