அயோத்தி ராமஜன்ம பூமியில் – சர்ச்சைக்குரிய கட்டடம் அமைந்திருந்த 2.77 ஏக்கர் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம் அனைத்துத் தரப்பினரும் தங்கள் வாதங்களை நிறைவு செய்வதற்கான தேதியை அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்து, முஸ்லீம் மனுதாரர்கள் தங்கள் வாதங்களை முடிக்க விரும்பும் தேதியை தெரிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 25 நாட்களாக இருதரப்பு வாத பிரதிவாதங்கள் அனல் பறக்க நடைபெற்று வருகிறது. தினமும் இந்த வழக்கை விசாரித்து வருகிறது உச்ச நீதிமன்றம்! இந்த வழக்கை விசாரித்து வரும் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் இடம் பெற்றுள்ள நிலையில் அவர் நவம்பர் 7ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
தமது காலத்திற்குள் தீர்ப்பை வெளியிட வேண்டும் என்று ரஞ்சன் கோகய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை தீர்ப்பு தள்ளிப்போகும் நிலையில், தமது ஓய்வுக்குப் பின்னர் வழக்கை விசாரிக்க புதிய அரசியல் சாசன அமர்வை ரஞ்சன் கோகய் உருவாக்க வேண்டியிருக்கும் என்று கூறப் படுகிறது. எனவே நவம்பர் மாத முதல் வாரத்துக்குள் இந்த வழக்கில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பப் படுகிறது.