தில்லி வந்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்புதான் இது என அதிகாரிகள் கூறினர்.
அண்மைக் காலமாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்தியில் ஆளும் பாஜக. என கடுமையாக சகட்டுமேனிக்கு விமர்சித்து வந்தார் மம்தா பானர்ஜி. சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு மேற்கு வங்கத்தில் கடும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மோடியை அவர் இன்று சந்தித்த போது, மோடிக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும், வழக்கம் போல், குர்தா மற்றும் இனிப்புக்களை பரிசாக வழங்கினார்.
ஒவ்வோர் ஆண்டும் நவராத்தி, தீபாவளி, மற்றும் மோடியின் பிறந்தநாள் ஆகிய முக்கிய நாட்களின் போது பிரதமர் மோடிக்கு குர்தா மற்றும் பெங்காலி இனிப்பு வகைகளை மம்தா வழங்குவது வழக்கம்தான். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, சகோதரி மம்தா தனக்கு குர்தா, ரசகுல்லாக்களை வருடந்தோறும் அனுப்பி வருகிறார் என்று உண்மையைப் போட்டுடைத்தார். ஆனால் அது தேர்தல் நேரம் என்பதால், மோடிக்கு எதிரான தீவிர அரசியலைச் செய்து வந்த மம்தா, இதனால் அதிர்ச்சி அடைந்தார்.
வாக்கு வங்கியை மனதில் வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் போது, மோடி இவ்வாறு கூறியதால், கோபத்தில் இனி மேற்கு வங்கத்தின் சகதியில் ஊறிய கூழாங்கற்களை அனுப்பி வைப்பேன் என்று கூறினார் மம்தா. ஆனால் அதனை விரும்பி ஏற்பதாகக் கூறிய மோடி, அது ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ரவீந்திரநாத் தாக்குர் என மகான்கள் வாழ்ந்த பூமியின் பிரசாதமாக ஏற்று உண்பேன் என்றார். இது வங்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பின்னர் வந்த தேர்தலில் பாஜக., எதிர்பாராத அளவுக்கு உறுப்பினர்களைப் பெற்று வெற்றி பெற்றது. இது மம்தா பானர்ஜிக்கு கடுக்காய் கொடுத்தது போல் ஆனது.
இந்நிலையில், இன்று மோடியை சந்தித்து நலம் விசாரித்து, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை நிதி குறித்து கோரிக்கை விடுத்தாராம்.
தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் மம்தா சந்திக்கிறார். இதுவும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப் படுகிறது.
முன்னதாக, மேற்கு வங்கத்தின் பெயரை பங்க்ளா என மாற்றுமாறு சட்ட மன்றத்தில் தீர்மானம் போடப் பட்டது. ஆனால் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. எனவே, மாநிலத்தின் பெயர் மாற்றம், பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டது இவை குறித்து பேசுவதற்காகவே மம்தா பானர்ஜி பிரதமரை சந்திக்கிறார் என்று கூறப் பட்டது. ஆனால், மேற்கு வங்கத்தை உலுக்கிய சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பில் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரைக் காப்பாற்ற, மம்தா சில முயற்சிகளை எடுப்பதற்காகவே தில்லியில் முகாமிட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.