உ.பி.யில் இளம் பெண்ணை பாலியல் கொடுமை செய்ததாக பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் கைது
பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சின்மயானந்தாவை உடனடியாக கைது செய்யாவிட்டால், தான் தீக்குளித்து தற்கொலை செய்வதைத் தவிர வேறுவழியில்லை சட்டக்கல்லூரி மாணவி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக., முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரமங்கள், கல்வி நிறுவனங்கள் நடத்தும் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தின் சட்டக் கல்லூரியில் சேர்ந்த மாணவி, தான் குளிக்கும்போது திருட்டுத் தனமாக படம் எடுத்து மிரட்டியதாக சின்மயானந்த் மீது குற்றம் சாட்டினார். மேலும், அதை வெளியிட்டு விடுவதாகவும், துப்பாக்கி முனையில் வைத்து தன்னை மிரட்டி சின்மயானந்தின் ஆதரவாளர்கள் அழைத்துச் சென்றனர் என்று புகார் அளித்துள்ளார்.
ஓர் ஆண்டாக சின்மயானந்த் தன்னை பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாகவும், அதை தன் கண் கண்ணாடியில் கேமரா பொருத்தி பதிவு செய்து ஆதாரம் வைத்திருப்பதாகவும் கூறினார். இதனால், தன்னையும் தன் குடும்பத்தையும் கொன்று விடுவதாக சின்மயானந்த் மிரட்டியதாக புகார் அளித்தார் அந்தப் பெண்.
ஆனால், இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் காரணங்களைக் கூறி நழுவி வந்தார் சின்மயானந்த். இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி சின்மயானந்த் விசாரணைக்கு ஆஜரானார். உச்ச நீதிமன்றம் நியமித்த உ.பி., சிறப்பு விசாரணைக் குழுவின் பல கட்ட விசாரணைகளின் போது, தனது குற்றச்சாட்டு தொடர்பாக 43 வீடியோக்கள் அடங்கிய ஒரு பென் டிரைவை அந்த மாணவி சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்தார்.
சின்மயானந்தின் படுக்கை அறைக்கு அந்த மாணவியை அழைத்துச் சென்ற விசாரணைக் குழு மேலும் ஆதாரங்களைத் திரட்டிய நிலையில் சின்மயானந்த் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.