சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அதன் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
பழைய கொள்ளையர் கட்சிகளையும், அதன் கூட்டு பங்காளிகளையும், பெருவாரி மக்களின் எண்ணப்படி ஆட்சியில் இருந்து அகற்றி, 2021ல் ஆட்சிப் பொறுப்பினை, மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம் கட்சி விரைவாக முன்னேறி வருகிறது.
நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களையும், அவர்களின் தலைப் பாகைகளையுமாவது தக்க வைத்து கொள்ளலாம் என்கின்ற எண்ணத்துடன் ஆட்சியில் இருந்தவர்களும், ஆள்பவர்களும் போடும் இடைத் தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது… என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஏற்கெனவே இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுபவர், ஒன்றரை வருடம் தான் எம்.எல்.ஏ.,வாக இருக்க முடியும் என்பதால் பிரதான கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் போட்டியிட தயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
அதனை வெளிப்படையாக சொல்லாமல், ஊழல் நாடகம் என கமல்ஹாசன் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .