ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ.,யால் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் ப.சிதம்பரம்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரத்திடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றன. சிபிஐ.,யைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு வருகிறது.
இந்நிலையில், தனக்கு 74 வயது ஆகிவிட்டது என்றும், 9 விதமான உடல் நலக் கோளாறுகள் தனக்கு உள்ளதாகவும் கூறி சிதம்பரம் தரப்பில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அவரது காவலை இரு வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. கடந்த ஆக.,21 ஆம் தேதி நள்ளிரவு கைது செய்யப்பட்ட சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இரு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை, காங்கிரஸ் இடைக்காலத் தலைவரும் ஐமு. கூட்டணி தலைவருமான சோனியா, காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அதற்கு முன்பாக, சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் திகார் சிறைக்கு வந்திருந்தார்.
சோனியா, மன்மோகன் ஆகியோர் வந்து தன்னை சந்தித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம். மேலும், அவர் தன் குடும்பத்தினர் மூலமாக, தனது டிவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளதாகக் கூறிய செய்தியில்… நான் திருமதி சோனியா காந்தி, டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோரால் மதிப்பளிக்கப் பட்டுள்ளேன். காங்கிரஸ் கட்சி எவ்வளவு வலிமையுடனும் தைரியமாகவும் உள்ளதோ அந்த அளவுக்கு நானும் வலிமையுடனும் தைரியமாகவும் இருப்பேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
I have asked my family to tweet on my behalf the following:
— P. Chidambaram (@PChidambaram_IN) September 23, 2019
I am honoured that Smt. Sonia Gandhi and Dr. Manmohan Singh called on me today.
As long as the @INCIndia party is strong and brave, I will also be strong and brave.
இவரது டிவிட்டர் பதிவுக்கு பலரும் கேலி செய்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.