பதன்கோட் உள்ளிட்ட 4 முக்கிய விமானப்படை தளங்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
அதனால் இந்த விமானப்படை தளங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாக்கிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத குழுக்கள் செப்.,25 முதல் 30 ம் தேதிக்குள் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதால், விமானப்படை தளங்களில் அதிகமான பாதுகாப்பை ஏற்படுத்தும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆக.,5 ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து பாக்கிஸ்தான் ராணுவத்தால் பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் அவ்வப்போது ஊடுருவி அத்துமீறி வருகின்றனர்.
விமானப்படை தளம் அல்லது முக்கிய தலைமை அகங்களில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பதன்கோட் மற்றும் உதம்பூர் விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களை மர்ம நபர் ஒருவர் கண்காணித்து சென்றதை அடுத்து பாதுகாப்புப்படை மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி ஆரஞ்ச் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
2016 ம் ஆண்டு பதன்கோட்டில் ஜெய்சி-இ-முகம்மது பிதாயீன் அமைப்பினர் 3 நாட்கள் நடத்திய தாக்குதலை போன்று இதுவும் அமையலாம் என்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.