நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் 20 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்து விட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அரசையே அலற விடுறவங்க நாங்க… எங்கிட்டயா என்று மிரட்டியதாகவும் கூறப் பட்டுள்ளது.
சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் மணிமாறன். சினிமா தயாரிப்பாளரான இவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், ‘டிராபிக் ராமசாமி’ என்ற படத்தை இயக்கினார். தமிழகத்தில் இந்த படத்தை வெளியிடும் உரிமையை வெளிநாடு வாழ் இந்தியரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் என்பவருக்கு வழங்கியிருந்தார்.
இதற்கு முன்பணமாக 21 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டார். அதன் பிறகு படத்தை தானே வெளியிட இருப்பதாகக் கூறி, படத்தை வெளியிடும் முன் 21 லட்ச ரூபாயை திருப்பி தந்து விடுவதாக உறுதி அளித்தார்.
ஆனால் சொன்னபடி பணம் தரவில்லை. கடந்த ஓர் ஆண்டாக இழுத்தடித்து வந்தார். இதனால் என் நண்பரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் 21 லட்சம் ரூபாய் விவகாரம் குறித்து சந்திரசேகரை சந்திக்கும்படி கூறினார்.
நான் செப்டம்பர் 26-ஆம் தேதி எஸ் ஏ சந்திரசேகர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தேன். அப்போது அவர் பணம் எல்லாம் தர முடியாது; நீங்களும் பிரம்மானந்தம் சுப்பிரமணியமும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்! நாங்கள் அரசாங்கத்தையே அலற விடுபவர்கள் என்று மிரட்டினார்.
சந்திரசேகர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்!