திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே முதிய தம்பதிகளை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற விவகாரத்தில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள் ளார். இது குறித்து விளக்கம் அளிக்கவுள்ளார் மாவட்ட எஸ்.பி. அருண் சக்தி குமார்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் முகமூடி அணிந்து வந்த இருவர், வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த முதியவர் சண்முகவேல் என்பவரை அரிவாளால் தாக்கிவிட்டு கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அவரும் அவரது மனைவி செந்தாமரையும் இணைந்து கொள்ளையர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு தாக்கினர்.
இதனால் செய்வதறியாமல் திகைத்து நின்ற கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்தச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் இணையதளங்களில் வைரலானது. இவர்களின் வீரச் செயலைப் பாராட்டி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தொடங்கி பலரும் டிவிட்டரில் பதிவிட்டனர். இவர்களுக்கு வீரத் தம்பதி என விருதும் வழங்கியது அரசு.
இதை அடுத்து, கிடைத்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறை யினர் விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பழைய குற்றவாளி என்று கூறப்படுகிறது. மேலும் இருவர் இது தொடர்பில் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இதனிடையே, நெல்லை மாவட்டம் கடையத்தில் முதியவர்களைத் தாக்கி கொள்ளை முயற்சியில் இருவர் ஈடுபட்ட வழக்கு குறித்து, செய்தியாளர் சந்திப்பு, இன்று பகல் 12 மணியளவில் நெல்லை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தலைமையில் நடைபெற உள்ளதாக மாவட்ட காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. அதில் கூடுதல் தகவல்கள் தெரியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.