பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் வேட்டி – சட்டை அணிந்து வலம் வந்ததால் தமிழராகிவிட முடியாது என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
அவரது கருத்துக்கு பதில் கொடுக்கும் வகையில், சேலை கட்டி வேடம் போட்டதனாலேயே சோனியா இந்தியர் ஆகிவிட முடியாது; ஒரு இத்தாலியரை தலைவராக வைத்திருப்பதாலேயே காங்கிரஸ் கட்சி இந்தியர் நலம் பேணும் கட்சி ஆகிவிட முடியாது; அந்தக் கட்சியில் இருப்பதலாயே திருநாவுக்கரசர் நாட்டுப் பற்றுள்ள நபர் ஆக தன்னைக் கூறிக் கொள்ள முடியாது என்று சமூகத் தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர் பலர்.
பிரதமர் மோடி வேட்டி கட்டியது குறித்து காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் எம்.பி. கூறியபோது:- பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் வேட்டி – சட்டை அணிந்து வலம் வந்ததால் தமிழராகிவிட முடியாது. இதனால் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் என்ன லாபம்? குப்பை பொறுக்கியதால் என்ன லாபம்? அவர் தங்கி இருந்த ஓட்டல் 5 நட்சத்திர ஓட்டல். அது வெளிநாட்டவர்கள் தங்கும் ஓட்டல். எப்போதும் அந்த கடற்கரை சுத்தமாகவே இருக்கும்.
அதில் குப்பை பொறுக்குவது என்பது மலிவான விளம்பரம் மூலம் மக்களை திசை திருப்பும் முயற்சியே. ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதை திசை திருப்பத்தான் முயற்சிக்கிறார். ஆனால் அது தமிழ்நாட்டில் எடுபடாது. இதனால் வேலைவாய்ப்போ, தொழில்வளமோ கிடைக்குமா?
இந்திய பிரதமரும்- சீன அதிபரும் சந்தித்தது நல்லதுதான். ஆனால், சீன பட்டாசு உள்பட பல பொருட்கள் மலிவான விலையில் இறக்குமதியாகின்றன. அந்த பொருட்கள் தரமானவையும் அல்ல. இந்தியாவை வணிக சந்தை இடமாக இந்த சந்திப்பின் மூலம் ஆக்கிவிடாமல் முதலீடு, தொழில், வேலைவாய்ப்பு கிடைக்கிற வகையில் பயனுள்ள ஒப்பந்தங்கள் ஏற்பட்டால் நிச்சயமாக வரவேற்கலாம். இல்லையென்றால் பல கோடி செலவில் நடத்தப்பட்ட 2 நாள் பயணில்லா திருவிழாவாகவே கருதப்படும் என்றார் திருநாவுக்கரசர்.