காஷ்மீர் பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாகத் தகவல் பரவியது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் சில இந்திய வீரர்கள் பலியானதாக தகவல்கள் பரவியதால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. இந்தநிலையில், நேற்று பாகிஸ்தானின் செயலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் சில தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், பாகிஸ்தான் தரப்பிலிருந்து இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாகிஸ்தானியர்கள், இந்தியா அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் இதன் காரணமாக பல அப்பாவி மக்கள் பலியானதாகவும் தெரிவித்து வந்தது.
இந்தச் சம்பவங்களால் நேற்றைய நாள் முழுவதும் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதற்கிடையே, நேற்று பாகிஸ்தான் தரப்பில் இந்திய ராணுவம் பொதுமக்கள் பகுதியில் தாக்குதல் நடத்தியதாக சிலர், சில புகைப்படங்களை ஆதாரமாகப் பகிர்ந்தனர்.
இதுதொடர்பாக, இந்திய ராணுவத்தில் ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் கெளரவ் ஆர்யா தன்னுடைய ட்விட்டர் பதிவில், பாகிஸ்தானியர்கள் பகிர்ந்த படத்தை ஷேர் செய்து, “இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக பொய்ப் பிரசாரத்தைப் பரப்பி வருகிறது. அதற்கு ஆதாரமாக அவர்கள் ஒரு சில புகைப்படங்களையும் பரப்பி வருகின்றனர். அவர்கள் வெளியிட்ட இந்தப் புகைப்படத்தை சற்று கூர்ந்து கவனியுங்கள்.
அங்கு காட்டியிருக்கும் புகைப்படத்தில் இருக்கும் வெடிகுண்டில், பி.ஓ.எஃப் என்று உள்ளது. அதாவது பாகிஸ்தான் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு தொழிற்சாலை என்று அர்த்தம். யாராவது பாகிஸ்தான் ராணுவத்துக்கு தங்களின் வீட்டுப் பாடத்தை சரியாகச் சொல்லுங்கள். தங்கள் நாட்டு மக்கள் மீதே தாக்குதல் நடத்துவது என்பது சரியான நடைமுறை கிடையாது” எனப் பதிவிட்டுள்ளார்.
Pakistan is spreading lies that India is killing civilians in PoK. They have posted this picture as “proof”. Look closely. The shell has POF (Pakistan Ordnance Factory) markings.
— Major Gaurav Arya (Retd) (@majorgauravarya) October 21, 2019
Will someone please ask Pak Army to do their homework????. And…it’s not a good idea to bomb oneself. pic.twitter.com/xVEOs5y5X3