கனமழை காரணமாக ராமநாதபுரம், சேலம், நீலகிரி ஆகிய மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை இன்று விடுமுறை விடப் பட்டுள்ளது. சென்னையில் கன மழை பெய்யும் என்று வானிலை எச்சரிக்கை அறிவிக்கப் பட்டாலும், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை மேலும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பரவலாக மழை பெய்தாலும், சில இடங்களில் கன மழை பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டிருக்கிறது.
இதனிடையே, தொடர்மழை காரணமாக மூன்று மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சாலைகள் பல இடங்களில் துண்டிக்கப் பட்டிருக்கின்றன. மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப் பட்டிருக்கிறது. இந்நிலையில், இன்று நீலகிரி மாவட்டபள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அறிவிப்பு வெளியிட்டியிருக்கிறார்.
தொடர் மழை காரணமாக சேலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.
தமிழகம் மட்டுமன்றி புதுவை மாநிலத்திலும் மழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக, காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் ஆகிய வட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. பூண்டி, மாதவரம், சோழவரம், மீனம்பாக்கம், பல்லாவரம், கோயம்பேடு, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அண்ணாநகர், வடபழனி குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் என மூன்று மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.
இந்நிலையில், மழை மேலும் 2 நாட்களுக்குத் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று கூறப் பட்டுள்ளது!