தாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பாரத பிரதமர் நரேந்திர மோடி..!!
பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து நாட்டில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இன்று தில்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றடைந்தார்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் வந்திறங்கிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பிரதமர் மோடி நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றார். அவரை இந்திய வம்சாவளியினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அவரை வரவேற்கும் விதமாக, நகரெங்கும் ஸவஸ்தே பிஎம் மோடி என்ற பதாகைகள், வரவேற்பு வாசகங்கள் எழுதப் பட்டு வைக்கப் பட்டிருந்தன.
பின்னர், ஒரு நிகழ்ச்சியில், தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப் பட்ட உலகப் பொதுமறையாம் தமிழ்மறை திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி.
இந்த நிகழ்ச்சியில் பேசிய போது, திருக்குறளில் இருந்து சில கருத்துகளையும் அடிக்கோடிட்டுப் பேசினார். உதாரணத்துக்கு சில குறட்பாக்களையும் தமிழில் சொன்னார்.
அவர் குறிப்பிட்ட ஒரு குறள்…
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
(அதிகாரம்: ஒப்புரவறிதல் குறள் எண்:212 )
ஒப்புரவாளன் முயற்சி செய்து கிடைத்த பொருளெல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்காகவே செலவிடுவான் என்பது இக்குறட்கருத்து.
( उदाहरण के लिए, संत थिरू वल्लुवर कहते हैं-
ताड़ात्रि दंड पोरूड़ेल्ल डक्करक्क
वेल्ड़ामि सइदर पुरूट्ट।
– यानि योग्य व्यक्ति परिश्रम से जो धन कमाते हैं उसे दूसरों की भलाई में लगाते हैं।भारत और भारतीयों का जीवन आज भी इस आदर्श से प्रेरणा लेता है।: PM) – என்று குறிப்பிட்டார் பிரதமர் மோடி!
இதேபோன்று இந்த நிகழ்ச்சியில் சீக்கிய மதகுருவான குரு நானக் தேவரின் 550வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அதனை குறிக்கும் வகையிலான நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார்.
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக தாய்லாந்து நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், பொதுமக்கள் பலர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.