பள்ளி வகுப்பின் வெளியே காலி பாத்திரத்தோடு நின்றிருந்த சிறுமியின் பரிதாப பசிப் பார்வை சமூகத் தளத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய நேரத்தில், அதே பள்ளியில் சிறுமிக்கு அட்மிஷன் கிடைத்துள்ளது!
கையில் நசுங்கிய அலுமினியப் பாத்திரத்தோடு ஒரு ஏழைச் சிறுமி வகுப்பறையின் முன் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் அந்தக் காட்சி, அனைவரின் இதயத்தையும் கரைத்து விடக் கூடியது. சுதந்திர இந்தியாவில் பசியோடு தவிக்கும் ஏழைகளின் வாழ்க்கைக்கு கண்ணாடி பிடிப்பது போன்ற அந்தக் காட்சி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.
ஹைதராபாத் ‘குடிமல்கபூர்’ என்ற இடத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் ஒரு தினசரி பத்திரிகையின் போட்டோகிராபர் கிளிக் செய்தது. பள்ளியில் மதிய உணவு மாணவர்கள் உண்டது போக மீதி இருந்தால் எடுத்துச் சென்று உண்ணலாம் என்று, மீதி சோற்றுக்காக இவ்விதம் தினமும் கையில் காலி பாத்திரத்துடன் அந்தச் சிறுமி அங்கு வந்து நிற்பாள் என்றும், மாணவர்கள் மதிய உணவு முடிக்கும்வரை காத்திருப்பாள் என்றும் அந்தப் பத்திரிக்கையில் எழுதப் பட்டிருந்தது.
பத்திரிக்கையில் ‘பசிப் பார்வை’ என்ற தலைப்பில் பிரசுரமான அந்த புகைப் படத்தைப் பார்த்த எம்வி பவுண்டேஷன் என்ற தன்னார்வ நிறுவனத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கட் ரெட்டி ஆடிப்போய்விட்டார். அந்த போட்டோவை தன் ஃபேஸ்புக் பேஜில் பதிவு செய்தார்.
அந்தச் சிறுமிக்கு அதே அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் உரிமை, உணவு உண்ணும் உரிமை ஏன் ஏற்படுத்தித் தரக்கூடாது என்று வினா எழுப்பினார்.
பின்னர் அவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து அந்தச் சிறுமி வசிக்கும் இடத்திற்குச் சென்றார். சிறுமியின் பெற்றோரோடு பேசி அவளுக்கு அதே பள்ளியில் அட்மிஷன் வாங்கித் தந்தார். அவற்றையும் தன் பேஸ்புக்கில் வெளியிட்டு மகிழ்ந்தார்.
அவள் பெயர் திவ்யா. இனி அவள் கல்வியோடு கூட வயிறு நிறைய உணவும் பெறுவாள் என்று எழுதியுள்ளார். முதுகில் பையோடு பள்ளி முடிந்து திரும்பி வந்த திவ்யா, முட்டை சோறும் பருப்பும் சாப்பிட்டேன் என்று திருப்தியாக தன் தாயிடம் கூறினாளாம்!