அரபு நாட்டில் பிச்சை எடுப்பது குற்றம். யாராவது பிச்சை எடுப்பதை போலீசார் பார்த்துவிட்டால் சிறைக்குச் செல்ல வேண்டியதுதான்.
அண்மையில் அரேபிய பெண் ஒருவர் பிச்சை எடுக்கும் போது ரோந்து பணியில் இருந்த பெண் போலீஸ் ஆபீஸர் பார்த்து விட்டார். ஆனால், அவளை விசாரித்த போலீஸ் அதிகாரியை தாக்கத் தொடங்கினாள் அந்தப் பிச்சைக்காரப் பெண்.
தற்போது இந்த வழக்கு ‘அஸ்மன்’ கிரிமினல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. பிச்சை எடுத்த பெண்ணை குற்றவாளியாக தீர்மானித்த நீதிமன்றம் அவளுக்கு 4 மாத சிறை தண்டனை விதித்தது. அதோடு தண்டனை காலம் முடிந்த பின் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது.
அஜ்மன் நகரில் ‘அல் நுயிமியா’ என்ற இடத்தில் பேட்ரோலிங் – ரோந்து பணியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி, 54 வயது அரேபிய பெண் பிச்சை எடுப்பதை கண்டார். அதனால் ‘ஆன்ட்டி பெகிங் ட்ரைவ்’ என்ற போலீஸ் சட்டத்தின்படி பிச்சைக்காரியை அடையாள அட்டை காட்டும்படி போலீஸ் அதிகாரி கேட்டார்.
அவ்வளவுதான்… தன்னிடம் அது போன்ற அடையாள பத்திரங்கள் எதுவும் இல்லை என்றும் என்ன செய்வாயோ செய்து கொள் என்றும் எடுத்தெறிந்து பேசி உள்ளாள் பிச்சைக்காரி. விசாரித்த அதிகாரியை அடித்துத் தாக்கிவிட்டு பிச்சைக்காரி ஓடி விட்டாள்.
அதனால் போலீசார் அவரைத் தேடிப் பிடித்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். விசாரணையில் தான் போலீஸ் அதிகாரியை அடிக்கவே இல்லை என்று வாதிட்டாள் பிச்சைக்காரப் பெண்.
அதனால் போலீஸ் அதிகாரி தன் காயங்களுக்கான மருத்துவ சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தார். அதனால் கோர்ட் பிச்சைக்காரியை குற்றவாளியாக தீர்மானித்தது.