ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்த விசாரணைக்கு ஐஐடி நிர்வாகம் முழுஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், சோஷியல் மீடியாக்களின் வதந்திகளுக்கு யாரும் செவிசாய்க்க வேண்டாம் என்றும் ஐஐடி தரப்பில் அறிக்கை வெளியிடப் பட்டிருக்கிறது.
ஐஐடி மெட்ராஸில் மானுடக் கலையியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு படித்து வந்தார், மாணவி பாத்திமா லத்தீப். இவர், கடந்த நவம்பர் 9ம்தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் கூறப் படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் காரணமாக, உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவியின் மரணத்திற்கு மதரீதியான பாரபட்சம் காரணம் என்று கூறி, அரசியல் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் மூலமாக, ஐஐடி கேம்பஸில் போராட்டங்கள் தலை தூக்கியுள்ளன. இது அரசியல் கட்சிகளின் தூண்டுதலாலும், கட்சிகளின் ஊடகங்களாலும் பெரிதாகப் பேசப் பட்டு, பல்வேறு இடங்களிலும் போராட்டத்துக்கு மாணவர்களைத் தூண்டி வருகின்றனர்.
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் ”ஜஸ்டிஸ் பாஃர் பாத்திமா”(Justice for Fathima) என்ற பெயரில் பதிவுகள் எழுதிவருகின்றனர். அதே நேரம், இவற்றை எதிர்த்தும், சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஐஐடி குறித்து சாதிய மதரீதியிலான சாயம் பூசி, சமூகத் தளங்களில் இஸ்லாமியர்கள், இடதுசாரிகள், அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகின்றன.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஐடி நிர்வாகம், வெள்ளிக்கிழமை இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டது.
அதில், இது தொடர்பாக நடைபெறும் விசாரணைக்கு எல்லா விதமான ஒத்துழைப்பு தரப்படுவதாகவும், நிர்வாகத்தை பற்றி சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகும் கருத்துக்கள் ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விரக்தியை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”எங்கள் நிர்வாகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் உயர்தரமானவர்கள், நேர்மைக்கு பெயர் பெற்றவர்கள். மாணவியின் இழப்புக்காக இரங்கல் தெரிவித்து வருகிறோம்.
எங்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் உடல் மற்றும் மன நலனை உறுதிப்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுத்துவருகிறோம். விசாரணை முழுமையாக முடியும் வரை வதந்திகளைப் பரப்ப வேண்டாம்,”என ஐஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.