மீர்பேட்டில் 7 வயது சிறுவனின் கடத்தல். குற்றவாளியை பார்த்து போலீசார் அதிர்ச்சி!
சினிமா, சீரியல் பார்ப்பதன் விளைவு பிள்ளைகளின் மேல் எந்த அளவு உள்ளது என்பதை தெரிவிக்கும் சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது .
பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன், ஒரு 7 வயது சிறுவனைக் கடத்தியுள்ளான். 3 லட்சம் ரூபாய் தரச் சொல்லி பெற்றோரை மிரட்டி உள்ளான். மீர்பேட்டில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜ்குமார் என்ற மென்பொருள் பணியாளர் தன் மனைவி மற்றும் மகன் அர்ஜுனுடன் மீர்பேட் டிஎஸ்ஆர் காலனியில் வசித்து வருகிறார். ஞாயிறு மதியம் 3 மணிக்கு வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அர்ஜுன் திடீரென்று காணாமல் போனான். பெற்றோர் எல்லா இடங்களிலும் சிறுவனை தேட ஆரம்பித்தனர்.
சற்றைக்கெல்லாம் ராஜ்குமாருக்கு ஓரு போன் வந்தது. “உங்கள் மகனை கடத்தி விட்டோம். மூன்று லட்சம் கொடுத்தால் விட்டு விடுவோம்” என்று கூறிவிட்டு உடனே போன் கட்டாகி விட்டது.
அதனால் கவலை கொண்ட ராஜ்குமார் மீர்பேட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் கடத்தல்காரனுக்கு வலை போடத் தொடங்கினர்.
அதற்குள் கடத்தல்காரனிடமிருந்து அடிக்கடி பணம் கேட்டு ராஜ்குமாருக்கு போன் வரத் தொடங்கியது. அதனால் போலீசார் போன் சிக்னலைக் கொண்டு கடத்தல்காரனின் லொகேஷனை அடையாளம் கண்டு அங்கே சென்றனர்.
அந்த கடத்தல்காரரைப் பார்த்ததும் அனைவரும் ஒரேயடியாக அதிர்ச்சி அடைந்தனர். குற்றவாளி யாரோ முரடன் அல்ல. பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் . அவன் போலீசாரைக் கண்டதும் ஓட முயற்சித்தான். ஆனால் அவனைப் பிடித்து ஜீப்பில் ஏற்றினர். அர்ஜுனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர் போலீசார்.
ஆனால் இந்தக் கடத்தலில் வேறு யாருடைய கரமாவது உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருவதாக மீர்பேட் இன்ஸ்பெக்டர் யாதய்யா தெரிவித்தார்.
சீரியலும் சினிமாவும் சிறுபிள்ளைகளின் குற்றச் செயல்களை தூண்டிவிட்டு வளர்கின்றன என்று உள்ளூர் மக்கள் விமர்சனம் செய்தனர். பெற்றோர் பிள்ளைகளின் நடத்தை மீது ஒரு கண் வைக்காவிட்டால் இப்படித்தான் கெட்டுப் போவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.