மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு!
மேயர், நகர்மன்ற, பேரூராட்சி தலைவர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்யும் வகையில் அவசர சட்டம் பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலுடன், தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்து அவசரச் சட்டம் பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மேயர்கள், நகர்மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர்கள் இனிமேல் மக்களால் தேர்வு செய்யப்பட மாட்டார்கள்.
மாநகராட்சி மேயர் பதவிகள், பேரூராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளின் தலைவர்கள் இனிமேல் மறைமுக தேர்தலால் தேர்வு செய்யப்படுவர்.
அதாவது, மாநகராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளின் கவுன்சிலர்கள், தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படுவர். பின்னர் மாநகராட்சி கவுன்சிலர்கள் மேயர்களையும், பேரூராட்சி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் அந்தந்த அமைப்புகளின் தலைவர்களையும் தேர்வு செய்வர்.
மாநகராட்சி மேயர், பேரூராட்சி, நகராட்சி தலைவர்கள் இதுவரை மக்களால் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும்போது, மன்றத்திலுள்ள பெரும்பாலான கவுன்சிலர்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்களாகவும், மேயர் மற்றும் நகர்மன்ற, பேரூராட்சி தலைவர்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருந்தனர்.
இதனால் மேயர், கவுன்சிலர்கள் இடையே ஒத்துழைப்பு ஏற்படுவதில் பிரச்னை இருந்து வந்தது. தற்போது கவுன்சிலர்களே மேயரை தேர்வு செய்யும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதால் இனி அவ்வாறு பிரச்னை இருக்காது என கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த நடைமுறை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்பது ஏற்கெனவே இருந்த நடைமுறைதான் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சரை எம்எல்ஏக்களும், பிரதமரை எம்பிக்களும் தேர்வு செய்வது போல் மேயர்களை கவுன்சிலர்கள் தேர்வு செய்வது ஜனநாயக நடைமுறை.ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட வழிகளின்படியே உள்ளாட்சி தேர்தல் நடக்கும். சட்டத்திற்கு உட்பட்டு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. திமுக ஆட்சி காலத்தில், கவுன்சிலர்கள் தான் மேயரை தேர்வு செய்தனர். 2006 ல் திமுகவும் மறைமுக தேர்தலைத் தானே நடத்தியது. தேர்தல் முறை மாறினாலும், உள்ளாட்சி தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது என்றார்.
அதே நேரம் மாநகராட்சி மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டிருப்பதற்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசு வெளியிட்ட அரசாணை அறிவிக்கை…