தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுவையிலும் அடுத்த இரு நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றார்.
மேலும், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்! நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நவ.28, 29 ஆகிய தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் தங்கச்சிமடத்தில் 7 செ.மீ, மழை பதிவாகி உள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரி கடல் பகுதியில் சூறைக்காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் குமரிக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் 16 செ.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 8 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் 30 செ.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், 18 செ.மீ. மழையும், புதுவையில் 34 செ.மீ பெய்ய வேண்டிய நிலையில், 13 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது… என்று புவியரசன் கூறினார்