தெலங்கானாவில் எரித்துக் கொல்லப்பட்ட இளம் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் வாயில் மதுவை ஊற்றி கொடுமைப்படுத்தி கொன்று எரித்துள்ளது அவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஷம்ஷாபாத் பகுதியில் கால்நடை மருத்துவரான 26 வயது இளம்பெண் பிரியங்கா, முன்னிரவு வீடு திரும்பும் முன், லாரி டிரைவர் மற்றும் உதவியாளர் என 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்து, அந்தப் பெண்ணை 27 கி.மீ., தொலைவில் உள்ள பாலத்தின் அடியில் போட்டு தீயிட்டு எரித்துக் கொன்றுள்ளனர்.
இது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், 4 பேரில் ஒருவன் பெண்ணின் பைக்கை பஞ்சர் செய்துள்ளான். இரவு 9.15க்கு வீட்டிற்கு புறப்படும் போது பஞ்சர் ஆனதை உணர்ந்த அந்தப் பெண்ணுக்கு உதவுவது போல் 4 பேரும் முன் வந்துள்ளனர்.
ஆனால் அவர்கள் நான்கு பேரும் மது அருந்தி இருந்ததால் அவர்கள் மீது சந்தேகம் கொண்ட அந்தப் பெண், தன் சகோதரியிடம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்குமாறு கூறியுள்ளார். ஆனால் இதைப் பார்த்த ஒருவன், அந்த செல்போனைப் பிடுங்கிக் கொண்டுள்ளான். பிறகு அந்தப் பெண்ணை புதருக்குள் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர்.
அந்தப் பெண் கத்துவது வெளியில் கேட்காமல் இருக்க வாயில் மதுவை ஊற்றி அதன்பின், பலாத்காரம் செய்துள்ளனர். அந்தப் பெண் மயங்கிய நிலையில் லாரியில் ஏற்றி 27 கி.மீ., தொலைவில் உள்ள பாலத்தின் அடியில் போட்டு, நள்ளிரவு 2.30 மணி அளவில் எரித்துக் கொன்றுள்ளனர். .. இது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதே நேரம், இந்த விவகாரம் ஒரு பால்காரரின் தகவலின் பேரில்தான் போலீஸாருக்கே தெரியவந்துள்ளது.
காலையில் ஒரு பால்காரர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பொதுவாக வாகனங்களும் மக்களும் அந்த மேம்பாலத்துக்கு மேலாகவே செல்வது வழக்கம். பாலத்தின் கீழுள்ள பாதை குண்டும் குழியுமாக இருக்கும். ஆனால் அதுதான் குறுக்குவழி.
அதனால் நிறைய மாடுகள் உள்ள பால்காரர் பாலைக் கறந்து கொண்டு காலை 5 மணிக்கு அந்தப் பக்கமாக சென்றிருக்கிறார். அப்போது நெருப்பு எரிவதைப் பார்த்து இருக்கிறார். ஆனால் யாரோ குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டியிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு சென்று விட்டாராம். இருட்டாகக்கூட இருந்தது.
அவர், ஏழரை மணிக்கு திரும்பி வரும்போது அங்கே எரிந்தது ஒரு உடல் என்று கண்டுபிடித்து தன் கையில் போன் இல்லாததால் தன் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து போனை எடுத்து போலீசாருக்கு போன் செய்த பிறகு அவர்கள் அந்த இடத்துக்கு வந்துள்ளனர். தொடர்ந்து அந்த பால்காரரிடம் அவர் கண்டது குறித்து விசாரித்து தகவல் கேட்டுள்ளனர்.
ஒரு நகரத்தில் இவ்வளவுக்கு ஒரு படுகொலை, நடக்கும் நிலையில் போலீஸாரின் விழிப்பு உணர்வு எப்படி உள்ளது என்று இப்போது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டு வருகின்றன. குறிப்பாக, பெண்ணின் பெற்றோர் நள்ளிரவே புகார் அளித்தும், அது குறித்து நடவடிக்கை எடுக்காமல், மெத்தனமாக இருந்து, சிசிடிவி காட்சிகளைப் போட்டுப் பார்த்து, மிகவும் அசட்டையாக இருந்துள்ளனர் போலீஸார்.
அந்த நள்ளிரவே ரோந்து வாகனத்தில் எடுத்துக் கொண்டு, புகார் வந்தவுடன் சாலையில் தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருந்தால், அதிகாலை 2.30க்கு அந்தப் பெண்ணை எரிக்கும் வரை அந்தக் குற்றவாளிகளுக்கு அவகாசம் கொடுக்காமல் இருந்திருக்க முடியும். அந்தப் பெண்ணையும் காப்பாற்றியிருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.