50 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் நிமோனியா காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: முதியோர் நல மருத்துவர் நடராஜன் வேண்டுகோள்!
தென்காசியை அடுத்துள்ள அழகப்பபுரதில் புதிதாக கட்டப்பட்டுள்ள விஸ்வரக்ஷா சீனயர்ஸ் ஹோம் மற்றும் விஜயா கிளினிக் திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு முதியோர் நல மருத்துவர் பத்மஸ்ரீ டாக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். விழாவில் அவர் பேசும்போது, வரும் 2050 ஆண்டில் இந்தியாவில் 30 கோடி முதியோர்கள் இருப்பார்கள் என அரசின் ஒரு கணிப்பு சொல்கிறது என்றும் எனவே, அவர்களின் மருத்துவத் தேவைகள், சமூகப் பாதுகாப்பு போன்ற அம்சங்களை கவனத்தில் கொண்டு பல திட்டங்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
முதுமையை முறியடிக்க முடியாது என்றும் ஆனால், முதுமையால் ஏற்படும் தொந்தரவுகளை முறியடிக்கலாம் என்றும் அதற்கு முறைப்படி முழு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், சரிவிகித உணவு சாப்பிட வேண்டும் தினசரி முதியவர்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், 50 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களை நிமோனியா காய்ச்சல் தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எனவே, முதியோர்கள் நிமோனியா காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே போட்டுக் கொள்ளும் இந்தத் தடுப்பூசியால் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது என்றார்.
நிகழ்ச்சிற்கு தென்காசி மூத்த குடிமக்கள் சங்கத் தலைவர் துரைதம்புராஜ் முன்னிலை வகித்தார். விஸ்வம் பவுண்டேசன் மேனேஜிங் டிரஸ்டி டாக்;டர் சுகன்யா வரவேற்புரை வழங்கினார். விஸ்வம் பவுண்டேசன் நிறுவனரும் ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளருமான கந்தசாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சென்ரல் மாவட்ட கவர்னர் சேக்சலீம், ஐந்தருவி ஓம் ப்ரணவ்வா ஆசிரமம் நிறுவனர் விஸ்வநாதன், தென்காசி, அம்பை வேல்ஸ் வித்யாலாயா கல்வி நிறுவன தாளாளர் வீரவேல்முருகன், ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்பு மருத்துவர்கள், அறிஞர் பெருமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசு ஊழியர்கள், பெரியோர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர். இறுதியில் டிரஸ்டி விஜயலட்சுமி நன்றி கூறினார்.