வெங்காய விலை உயர்வைக் கட்டுப் படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
மேலும் அவர் இது குறித்து பேசியவற்றின் முழு வீடியோ பதிவும் டிவிட்டர் தளத்தில் பதிவிடப் பட்டு, அவரது உரையில் இருந்து ஒரு சிறு பகுதி மட்டும் எடுத்து வெளியே வைரலாக்கப் பட்டு, தவறான முறையில் பொருள் கொள்ள வைக்கப் படுவதாகவும் கூறப் பட்டுள்ளது.
வெங்காய விலை உயர்வு தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்களுக்கு குறுக்கிட்டு பதிலளித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது அவர், நான் அதிகம் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று கூறினார். அவரது இந்தப் பேச்சு வைரலாக்கப் பட்டு வருகிறது.
நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.130 முதல் ரூ.180 வரை உள்ளது. வட மாநிலங்களில் வெங்காயத்தின் இருப்பு குறைந்ததால், மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்படும் வெங்காயத்தின் அளவும் குறைந்து வருகிறது. இதனால் வெங்காய விலை பெரிதும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், வெங்காய விலை உயர்வைக் கண்டித்து தில்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது குறித்த விவாதம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
வெங்காய விலை உயர்வு குறித்து டிச.04 நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது, வெங்காய விலை உயர்விற்கு மத்திய அரசு தான் காரணம் எனவும், பொருளாதார மந்த நிலை காரணம் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் குற்றம்சாட்டினர்.
அப்போது ஒருவர், வெங்காயத்தின் இந்த அதிரடி விலை ஏற்றம் அதிகம் வெங்காயம் சாப்பிடுபவர்களை எரிச்சலடையவே வைக்கும் என்றார். அதற்கு குறுக்கிட்ட நிர்மலா சீதாராமன், “நான் அதிக அளவில் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை. அதனால் உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். நான் அதிகம் வெங்காயம் பயன்படுத்தாத குடும்பத்தில் இருந்து வந்தவள்” என்று கூறி பேச்சைத் தொடங்கினார். அந்த நேரத்தில் அவரது இந்தப் பேச்சு, அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து நிர்மலா சீதாராமன் குறிப்பிடுகையில், வெங்காய விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், தற்போதுள்ள நிலையை சமாளிக்கவும் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.