உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கமல்ஹாசன் திடீரென முடிவு செய்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் உள்ளாட்சியில் போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பகீர் முடிவினை எடுத்துள்ளார்.
பொதுவாக உள்ளாட்சித் தேர்தல் என்பது, கட்சி எனும் செல்வாக்கைக் கடந்து, தனிப்பட்ட வகையில் வேட்பாளரின் செல்வாக்கைப் பொறுத்து வெற்றிவாகையை சூட்டித் தரும். உள்ளாட்சியின்பலமே அதுதான். ஆனால், தாம் உள்ளாட்சியில் போட்டியிடப் போவதில்லை எனும் முடிவுக்கு கமல் சொன்ன காரணம்தான் இப்போது பலரையும் குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.
“இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்தப் பாத்திரமும் வேண்டாம்” என்று கமல் கூறியிருப்பது, தானும் அரசியல் நாடகம் என்ற சினிமாத்தனமான அரசியலையே இப்போதும் அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.
தொடர்ந்து, “2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே நோக்கம்” என்று கமல் கூறியிருப்பதை அவரது கட்சியினர் வேண்டுமானால் ஆறுதலுடன் நோக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கிறார்கள் சமூகத் தளங்களில்! பரவாயில்லை, 2021 ஐ யாரும் எழுதி இயக்கப் போவதில்லை என உணர்ந்தமைக்கு பாராட்டுக்கள் என்றும் கமலுக்கு பதில் கொடுத்து வருகிறார்கள்.