குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் சட்ட மற்றும் அரசியலமைப்பு தகுதி குறித்த தீவிர விவாதத்திற்குப் பிறகு, மக்களவை மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக 293 பேர் வாக்களித்துள்ளனர்.
இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் திட்டத்துக்கு, மக்களவையில் 293 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 82 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர்.
பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்து தங்கியுள்ள சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க, இந்த குடியுரிமை திருத்த மசோதா முன்மொழிகிறது. பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளின் இந்து, பார்சி, சீக்கிய, கிறிஸ்துவ, ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடுமையாக துன்புறுத்தப்படுகிறார்கள், அவர்கள், இங்கு வந்து, நீண்ட காலமாக இந்தியாவின் குடியுரிமையை கோரி வருகின்றனர்.
காங்கிரஸ், திரிணமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்த மசோதாவை முஸ்லிம்களுக்கு எதிரானது என்று கூறி எதிர்த்தன. இஸ்லாமிய நாடுகளிலிருந்து துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதையும், ஷியா மற்றும் அகமதியாக்கள் போன்ற முஸ்லீம் பிரிவுகள் ‘சிறுபான்மையினர்’ அல்ல என்பதையும் எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன! ஏனெனில் அந்த நாடுகளின் ஆதிக்க மதமாக இஸ்லாம் திகழ்கிறது.
இன்று நாடாளுமன்றத்தில், இந்த மசோதாவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் வாதம் பெரும்பாலும் தவறாகவே முன்வைக்கப் பட்டது. இந்தியாவில் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தை திருப்திப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்ட அவர்களின் தேர்தல் அரசியலில் இருந்து இது உருவானது.
மேலும், ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி, அமித் ஷாவை ‘ஹிட்லர்’ என்று அழைக்கும் அளவிற்குச் சென்றது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தி நிறைவேற்றினால் அரசியலமைப்பு முறியடிக்கப்படும் என்றார் அவர்.
இந்த மசோதாவிற்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக, தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது பேசிய அமித்ஷா, குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்றார்.
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்த இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதை அடுத்து இதற்கான சட்ட திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அமித்ஷா, குடியுரிமை சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல. இந்த மசோதா, 0.001 சதவீதம் கூட இந்தியா சிறுபான்மையினருக்கு எதிரானது என குறிப்பிடும் வகையிலான எதுவும் இல்லை. இந்த மசோதாவால் 1.75 கோடி மக்கள் பயனடைவர். அதனால் இதனை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
மேலும், பங்களாதேஷில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்துக்கள் எல்லாம் எங்கே ? அவர்கள் எங்கே இருக்கிறார்கள் ? காங்கிரஸ் ஆட்சியில் இந்திய குடியுரிமை ஏன் இந்துக்களுக்கு வழங்கவில்லை ? என்றுகேட்டார்.
அப்போது, அவையில் காங்கிரஸ் அமளி, கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா, நீங்கள் சத்தம் போடுங்கள் பரவாயில்லை … இந்த நாட்டில் நீங்கள் இந்துக்களுக்கு செய்த அநியாயங்களை சொல்லத்தான் செய்வேன் … இந்த அவையில் இன்னும் ஐந்து வருடங்கள் நேரம் உள்ளது தினமும் சொல்லுவேன் கேளுங்கள் … இந்தியாவை மதத்தின் அடிப்படையில் வெட்டிப் பிளந்த காங்கிரஸ் இன்று கூச்சலிடுகிறது …
1947 லிருந்து இன்று வரை பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் கொல்லப்பட்ட கற்பழிக்கப்பட்ட, மதம் மாற்றப்பட்ட, அங்கிருந்து இந்தியாவிற்கு விரட்டியடிக்கப் பட்ட இந்துக்கள் பற்றி விவாதிக்க காங்கிரஸ் தயாரா ? – என்று நாடாளுமன்றத்தில் இந்துக்களின் குரலாய் கர்ஜித்தார் அமித்ஷா!