தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுப்பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக, தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் மத்திய உளவுப் பிரிவினர் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரில் பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் சுற்றி வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறும் மத்திய உளவுப்பிரிவினர் தமிழக போலீசாரை அறிவுறுத்தியுள்ளனர். இதை அடுத்து அனைத்து மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர்களும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அலர்ட்டாக இருக்க அறிவுறுத்தப் பட்டிருப்பதால், சென்னையில் வாகன சோதனை நடத்தப் பட்டு வருகிறது. கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார்களை தடுத்து நிறுத்தி போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
இதனிடையே, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகள் முன்னெச்சரிக்கைப் பகுதிகளாக அறியப் பட்டு சோதனை தீவிரப் படுத்தப் பட்டது. அதற்கு ஏற்ப, பயங்கரவாதிகள் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனால், அவினாசி அருகே சேவூர் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அவ்வழியாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் இருந்த 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து சென்றனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட எஸ்பி., திஷா மித்தலுக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவரும் விரைந்து சென்று 4 பேரிடமும் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் 4 பேரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்களை போலீசார் விடுவித்தனர்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் இசுலாமிய அமைப்புகள் போராட்டங்களைத் தூண்டிவிட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.