நித்யானந்தா சீடர் ஈரோடு பல் மருத்துவர் மாயமாகி உள்ளார்
ஈரோடு: நித்யானந்தா சீடர்கள் ஆங்காங்கே மாயமாகி வரும் நிலையில், இப்போது ஈரோடு பல் டாக்டர் ஒருத்தரையும் காணோமாம்.. மகனை காணோம் என்று வயதான தாய் கோர்ட் படிக்கட்டு ஏறியுள்ளார்!
ஈரோடு நாச்சியப்பா வீதியைச் சேர்ந்தவர்கள், பழனிச்சாமி – லட்சுமி அம்மாள்.. இவர்களது ஒரே மகன் முருகானந்தம்.. கஷ்டப்பட்டு பல் டாக்டருக்கு படிக்க வைத்தார்கள்.
மேல்படிப்பு படிக்க 2003-ல் பெங்களூரு போனார்.. எதாச்சையாக நித்யானந்தா பேசும் சொற்பொழிவை கேட்டார்.. அவ்வவுதான். ஆசிரமத்துக்கு போய்விட்டார்.. அங்கேயே தங்கிட்டார்.. அது மட்டுமில்லை.. “பிராணாசாமி” என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு சாமியாராகிவிட்டார்.
போன மகனை காணோமே என்று தேடியபோதுதான் பெற்றோருக்கு மகன் சாமியாராகிவிட்டது தெரிந்தது.. அதனால் 3 வருடம் போராடி.. 2006-ல் மகனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தனர்.
மேட்டூரில் ஒரு டென்ட்டல் கிளினிக் ஆரம்பித்தும் தந்தனர்… ஒரு வருஷம் நல்லாதான் இருந்தார் பல் டாக்டர்.. திரும்பவும் 2007-ல் பெங்களூரு போய்விட்டார்.
திரும்பவும் மகனை அழைத்து வர பெற்றோருக்கு தெம்பு இல்லை.. 2017-ல் முருகானந்தம் அப்பா பழனிசாமி இறந்துவிட்டார்.. அப்பா இறந்த செய்தி கேட்டதும், அன்று ஒரே ஒருநாள் மட்டும் முருகானந்தம் வந்து.. சடங்குகளை செய்துவிட்டு திரும்பவும் பிடதியில் போய் அமர்ந்து கொண்டார்.
இதற்கு பிறகு லட்சுமி அம்மாளை மகனை கூட்டிவர முடியாமலேயே போய்விட்டது.. மகன் பாசம் அதிகரிக்கும்போதெல்லாம் அடிக்கடி பெங்களூரு போய் மகனை பார்த்துவிட்டு வருவார்.. ஆனால் அதற்கும் இப்போது கொஞ்ச நாளாக அனுமதி இல்லையாம்.. முருகானந்தம் ஆசிரத்தில் இல்லை என்றும் சொல்லி விட்டார்களாம்.
அதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி அம்மாள், மகனைக் காணவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.. இன்னும் 4 வாரத்தில் முருகானந்தம் இருப்பிடம் குறித்து பதிலளிக்க நித்யானந்தாவுக்கும் ஈரோடு எஸ்பிக்கும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.. இப்போது ஈரோடு காவல்துறை முருகானந்தத்தை தேடி கண்டுபிடித்து வர பெங்களூருக்கு போயுள்ளது!
ஏற்கனவே தேனி டாக்டரும் இப்படித்தான் மாயமாகியதாக புகார் தரப்பட்டுள்ளது.. இப்போது ஈரோடு டாக்டரையும் காணவில்லை என்கிறார்கள்.. நிறைய பேர் கைலாசாவுக்கு படையெடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த டாக்டர்களும் அங்கு போய்விட்டார்களா என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.