மாணவர்களுடன் பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி 16ஆம் தேதியில் இருந்து 20-ஆம் தேதிக்கு மாற்றப் பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் எந்தவித மன அழுத்தமும் இன்றி தேர்வுகளை எழுதும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பிரதமர் மோடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். வருடம் தோறும் தேர்வுக்கு முந்தைய காலத்தில் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த வருட நிகழ்ச்சி வரும் 16-ஆம் தேதி திட்டமிடப் பட்டிருந்தது.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களை தேர்வு செய்வதற்காக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சிறப்பு கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தியது. இந்த கலந்துரையாடலுக்காக வரும் 16-ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் இந்த நிகழ்ச்சி அரசியல் ஆக்கப் பட்டது. வரும் 16ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் விடுமுறை தினங்களில் ஒன்று என்பதால், அன்று மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, விடுமுறை தினங்களில் உல்லாசமாக ஊர்களுக்குச் செல்லும் ஆசியர்கள் அன்றைய தினத்தில் பள்ளிக்குத் திரும்ப விரும்பவில்லை. திமுக., சார்பு இயங்கத்தைச் சேர்ந்த அந்த ஆசிரியர்கள், இதனால் தங்கள் விடுமுறை பாதிக்கப் படுகிறது என்ற எண்ணி, பிரச்னையைக் கிளப்பினர். தொடர்ந்து, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை யுத்தத்தை தொடங்கினார். இது பெரும் சர்ச்சை ஆக்கப் பட்டது.
அதே போல், வேறு சில மாநிலங்களிலும் மகர சங்கராந்தி, லோரி உள்ளிட்ட பண்டிகைகள் இருந்தன. அந்த மாநிலங்களிலும் 16-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அந்த மாநிலங்களிலும் மாணவர்களை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்வதில் சிரமத்தை சந்தித்தனர்.
இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி 16ஆம் தேதிக்குப் பதிலாக 20-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அதில், மாணவர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி 16-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிக ஆர்வமும், உற்சாகமும் காணப்பட்டது. தனித்துவமான இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு மட்டுமின்றி, மன அழுத்தம் இன்றி தேர்வுகளை எழுதி வெற்றிகளை பெறுவதற்கு பிரதமர் மோடி வழங்கும் குறிப்புகளை பெறுவதற்கும் அவர்கள் ஆர்வமாக இருந்தனர்.
ஆனால் பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக 16ஆம் தேதி இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே மாணவர்கள், ஆசிரியர்களுடனான பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் 20-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று நடத்தப்படும்… என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.