முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் ஜூன் மாதம் சீனா செல்லவுள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.
சீனாவுக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள கலாச்சாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும், அங்குள்ள தொழிலதிபர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க அழைக்கவும் முதல்வர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.
அவருடன் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரும் சீனா செல்ல உள்ளனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் சென்று வந்த நிலையில், அடுத்ததாக வரும் ஜூன் மாதம் சீனா செல்ல உள்ளார். தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு சீன தொழிலதிபர்களுக்கு அவர் அழைப்புவிடுக்க இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்வதற்கு தேவையான அனுமதியை மத்திய அரசு தந்துவிட்டதால் பயண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே நீர் மேலாண்மை பற்றி அறிய இஸ்ரேல் செல்லவிருந்த முதல்வரின் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து செல்போன் நிறுவனங்கள், மின் சாதன பொருள் தயாரிப்பு தொழிற்சாலைகள் முதல்வரின் இந்த பயணம் மூலம் தமிழகத்தில் கிளையை நிறுவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் தமிழகம் வருகை தந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், தமிழகத்தின் அன்பான உபசரிப்பாலும், கலாச்சாரத்தாலும் தாம் நெகிழ்ந்ததாக பாராட்டிவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.