கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முஸ்லிம் பயங்கரவாதிகள் 2 பேர், கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கேரளா செல்லும் அணுகுசாலையில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடியில், கடந்த 8ஆம் தேதி இரவு, பணியில் இருந்த களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், இரண்டு பேரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலில் கத்திக்குத்துக் காயங்களும் இருந்தன.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின! தமிழ்நாடு, கேரள மாநிலங்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்திய இந்த வழக்கில், திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவிலை அடுத்த இடாலகுடி தவ்ஃபீக் ஆகிய இருவரும் தேடப்பட்டு வந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டு, விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
இந்நிலையில், வில்சன் கொலையை அரங்கேற்றியவர்களுக்கு, மும்பையில் இருந்து துப்பாக்கி வாங்கிக் கொடுத்த இஜாஸ் என்பவன் பெங்களூருல் நேற்று கைது செய்யப்பட்டான். தொடர்ந்து, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு குற்றவாளிகள் எனக் கூறப்படும் அப்துல் சமீமும், தவ்ஃபீக்கும், கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும், தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இது குறித்து போலீஸார் கூறிய போது, இருவரும் உடுப்பியில் இருந்து மங்களூர்க்கு வந்து, அங்கிருந்து நேபாளத்துக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தனர்… என்றனர்.