ஈவேரா என்ற சமூக சீரழிப்புவாதியின் கட்டமைக்கப்பட்ட பிம்பம் சிதறிவருவதால், திராவிட இயக்கம் இப்போது கதறி வருகிறது. இதுதான் அண்மைக் கால பெரியார் அரசியல் என்பதை தமிழகம் கண்டு வருகிறது.
தற்போது இந்த பிம்பம் உடைக்கப்படுவதில் ரஜினியின் கருத்து முக்கியமானதாக இருக்கிறது. தமிழகத்தில் ஆங்கிலேயருக்கும் கிறிஸ்துவத்துக்கும் ஆதரவாக தொடங்கப்பட்ட இயக்கம் நீதிக்கட்சி என்று அழைக்கப் பட்டு, பின்னாளில் ஈ.வே.ராமசாமி நாயக்கரால் திராவிடர் கழகமாக உருப் பெற்றது. அப்போதே, சமூகப் பழக்கங்களை, சமுதாய ஒழுங்குமுறைகளை கேலி செய்து, அவற்றை சிதைப்பதில் முக்கியமானவராக இருந்தார் ஈ.வே.ரா.
சமுதாயச் சீரழிப்புவாதியாக இருந்த ஈ.வே.ரா., வழியில் அரசியல் இயக்கமாக உருப்பெற்ற திமுக., தலை தூக்கிய போது, முதல்வராக இருந்த பக்தவத்சலம் தெளிவாக ஒரு வார்த்தையைச் சொன்னார்… தமிழகத்தில் விஷக் கிருமிகள் பரவத் தொடங்கி விட்டன – என்று!
இன்று விஷச் செடிகளாகி, விஷத்தையே விளைவித்த மரமாகிவிட்டது திமுக., என்ற விஷ மரம்! அது தனது அரசியல் வாழ்வுக்காகக் கட்டமைத்த பிம்பம்தான், தந்தை பெரியார் என்ற ஹீரோயிச கதாபாத்திரம். தமிழகத்தின் அனைத்து ஒழுங்குமுறைகளையும் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் சிதைத்து, மாணவர்களை இளையதலைமுறையை எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள் என்ற மேலைநாட்டு ஹிப்பி கலாசாரத்தைப் புகுத்தி, சீரழித்த பெருமைக்குரிய பெரியாரின் பிம்பம், அரை நூற்றாண்டு காலத்துக்குப் பின்னர் மெதுமெதுவாக சரிந்து வருகிறது.
அதற்கு இப்போது மீண்டும் உயிர் கொடுத்திருப்பவர், அரசியலுக்குள் வரவா வேண்டாமா என்று இன்றும் ஒத்தையா ரெட்டையா போட்டுக் கொண்டு, டாஸ் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கும் ரஜினி காந்த். துக்ளக் இதழின் விழாவில் அவர் பேசியவை இதற்கு சாட்சி.
துக்ளக் விழாவில் பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும், நான் கேள்விப்பட்டதையும், பத்திரிக்கைகளில் வெளியானதையுமே கூறினேன் என்றும் கூறியுள்ளார் ரஜினிகாந்த். மேலும், தனது பேச்சு மறுக்கப்பட வேண்டியதல்ல, மறக்கப்பட வேண்டியது என்றும், 1971-ல் நடந்த பேரணி குறித்து இல்லாத குற்றச்சாட்டு எதையும் நான் கூறவில்லை என்றும் கூறியுள்ளார் ரஜினி காந்த்.
துக்ளக் விழாவில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் குறித்து ரஜினிகாந்த் பேசியதை திமுக.,வும், தொடர்ந்து திக., மற்றும் சார்பு ஊடகங்கள் சர்ச்சை ஆக்கின. இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையில், ரஜினிகாந்த் இன்று போயஸ்தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், தாம் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது! பத்திரிகைகள் மூலமாக நான் கேள்விப்பட்டதைத்தான் பேசினேன்! 1971ல் நடந்தவை மறைக்கப்பட வேண்டியதில்லை. மறக்க வேண்டிய சம்பவங்கள் என்றார்.
சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது, நடிகர் ரஜினி பெரியார் மற்றும் முரசொலி குறித்து பேசினார். அதில், சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் தற்போது அதிகம் வேண்டும். பத்திரிக்கை துறை தற்போது சரியாக இல்லை. முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லிவிடலாம்,கையில் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லிவிடலாம்.
‘1971-ல் ஆடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார். அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பிரசுரிக்கவில்லை. ஆனால், ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அதனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சிக்கல் உருவானது. இதனால், துக்ளக் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். உடனே கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் புத்தகத்தை வெளியிட்டார். அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது. அதன் மூலம் பத்திரிகை உலகில் சோ மிகவும் பிரபலமானார்”என்று பேசினார்.
1971 இல் திராவிடர் கழகத் தலைவராக இருந்த சமூக சீரழிப்புவாதி ஈவேரா., இந்துக்கள் புனித தெய்வமாக வணங்கிப் போற்றி வரும் ராமபிரானின் உருவத்தை செருப்பால் அடித்தார் என்பது கடந்த அரை நூற்றாண்டாக தமிழர்களின் மனத்தில் மாறாத வடுவாகப் பதிந்து உள்ளது. ஆனால் ரஜினி இதனைச் சொன்னதும் அதனை திக.,வினர் பெரும் சர்ச்சையாக்கினார்கள். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று மாற்றிப் பேசி வருகின்றனர். ஆனால், 2020 இந்த வருடத்துக்கு முன், கடந்த வருடம் 2019 வரை திக., தலைவர் வீரமணி இதனைப் பெருமையாகப் பேசி, அவ்வாறு நடந்ததால் தான் திமுக., பெரும் வெற்றி பெற்றது, ஓட்டு பெற்றது என்று கூறினார். அதனை அப்போது கைத்தட்டி ரசித்த தி.க.,வினர் இப்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஆனால், மீண்டும் திராவிடர் கழக சித்தாந்தத்துக்கே வேட்டு வைப்பதுபோல், 2020இல் தங்கள் சித்தாந்தத்தை மாற்றிக் கொண்டுள்ள திக.,வினர், ரஜினிகாந்த் இவ்வாறு பேசியதற்காக, அவர் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையேல், வருகிற 22.01.2020 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படவுள்ளது என்றனர். இதனை, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை. ராமகிருட்டிணன் அறிவித்தார்.
திராவிர் கழக தலைவர் கி.வீரமணி, ”ரஜினிகாந்த் இதற்கு தகுந்த விலையை கொடுப்பார். தவறான தகவலை தெரிவிக்கும் போது மற்றவர் சுட்டிக்காட்டினால் அதை ஏற்று திருத்திக் கொள்வதுதான் சரி. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் எப்படி பேசுவார் என்பது இதில் இருந்தே தெரிகிறது என்றார்.
ஆனால், பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா இது குறித்துக் கூறிய போது, ரஜினி இல்லாததைச் சொல்லவில்லை. நடந்த உண்மைகளைச் சொன்னார். எனவே அதற்காக ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டியதில்லை என்றார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது பேச்சு குறித்து, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, துக்ளக் விழாவில் நான் பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாகி வருகிறது. பெரியார் பற்றி நான் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். சாரி. பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது. பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது.
நான் இல்லாததை சொல்லவில்லை. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. நான் கேள்விப்பட்டதை, படித்ததைதான் நான் சொல்கிறேன். 2017ல் அவுட்லுக் பத்திரிக்கையில் வந்ததைதான் நான் பேசினேன்.
1971ல் நடந்த பெரியார் பேரணி குறித்து நான் கற்பனையாக பேசவில்லை. ராமர் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தது உண்மைதான். நான் சொன்னது தவறு கிடையாது, தெளிவாக அதை நான் விளக்கிவிட்டேன்.
நான் பார்த்ததை நான் சொல்கிறேன், அவர்கள் பார்த்ததை அவர்கள் சொல்கிறார்கள். இதை இனியும் பெரிதுபடுத்த கூடாது. மறுக்க வேண்டிய சம்பவம் கிடையாது, மறக்க வேண்டிய சம்பவம் என்றார் ரஜினிகாந்த்!
இதற்கு பதிலளிக்கும் வகையில், மன்னிப்பு கேட்க முடியாது என்ற ரஜினியின் கருத்தை ஏற்க முடியாது என்றார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். அது போல் அவரது கருத்தை ஒட்டி, அதிமுக., என்ற திராவிடக் கட்சியின் வேரான திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், ரஜினியின் மன்னிப்பு கேட்க முடியாது என்ற கருத்தை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.
அதே நேரம், ரஜினியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார். விநாயகர் சிலையை சாலையில் வீசியவர்கள் இந்து விரோதிகள் என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று வரை பெரியார் என்றால், ராமர் சிலைக்கு செருப்பு மாலை போட்டவர் என்று வீராப்பாக பேசி வந்தவர்கள், தமிழக வீர இளைஞர்களின் கனவுக் கதாநாயகன் அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியா 2020இல் அப்படியே மாற்றிப் பேசி வருகிறார்கள். இப்போது அவர்களுக்கு, பெரியார் செய்த செயல்கள் கூச்சத்தைத் தந்திருக்கின்றன, வெட்கத்தைத் தந்திருக்கின்றன. பெரியார் என்பவரை பெரியாராக வைத்திருக்க வேண்டுமென்றால், அவரது வரலாற்றை இப்போது திருத்தி எழுத வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. பெரியார் செய்த சமூக சீரழிப்புச் செயல்களை மாற்றி எழுதத் தலைப்பட்டிருக்கின்றனர் பெரியாரிய வாதிகள்!
இந்தியா 2020 நன்றாகவே வேலை செய்கிறது! செய்யட்டும்!
- செங்கோட்டை ஸ்ரீராம்