மகாராஷ்டிரா பீட் மாவட்டத்தில் பள்ளி நடத்திய கட்டுரைப் போட்டியில் நான்காம் வகுப்பு மாணவன் தன் வீட்டு நிலைமை பற்றி கள்ளம் இல்லாமல் எழுதினான். அதனைப் படித்த ஆசிரியர் மிகுந்த வருத்தம் அடைந்து அதனை தன் நண்பருடன் பகிர்ந்து கொண்டார்.
அந்த நண்பர் அந்த கட்டுரையை சோசியல் மீடியாவில் பதிவிடவே அது வைரலாக மாறி மகாராஷ்டிரா சமுதாய நீதித்துறை அமைச்சரைச் சென்றடைந்தது. உடனே செயலில் இறங்கிய அமைச்சர் அந்த மாணவனுக்கு பொருளாதார உதவி செய்யும்படி அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். அதோடு அந்த மாணவனின் கல்விச் செலவனைத்தையும் தான் ஏற்பதாக வாக்களித்தார்.
நடந்தது என்ன?
பீட் மாவட்டம் வால்கவாடி கிராமம் ஜில்லாபரிஷத் பள்ளி, “என் அப்பா” என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்தியது. அதில் பங்குகொண்ட நான்காம் வகுப்பு மாணவன் மங்கேஷ் வால்கே தன் வீட்டின் நிலைமையை உருக்கமாக எழுதினான்.
” என் பெயர் மங்கேஷ் பரமேஸ்வர். என் அப்பா மிகுந்த அன்பானவர். என் அப்பா பெயர் பரமேஸ்வர் வால்கே. நான் நன்கு படித்து பெரிய ஆபீசராக வரவேண்டும் என்று எப்போதும் சொல்வார். ஆனால் டிசம்பர் 18, 2019 அன்று டிபி நோய் காரணமாக மரணமடைந்தார். அப்போது என் அம்மா ரொம்ப அழுதார்கள். நானும் மிகவும் அழுதேன்.
எங்கள் வீட்டுக்கு நிறைய பேர் உறவினர்கள் வந்தார்கள். ஆனால் யாரும் எங்களுக்கு உதவ முன் வரவில்லை. என் அம்மா ஊனமுற்றவர். அதனால் வீட்டு வேலை எல்லாம் நானே செய்கிறேன். அப்பாவைப் பார்க்க வேண்டும் போல் உள்ளது. அப்பா விரைவில் திரும்பி வாருங்கள்! அம்மாவுக்கும் எனக்கும் இரவில் தனியாக இருக்க பயமாக இருக்கிறது” என்று எழுதியிருந்தான்.
அதனை படித்து ஆசிரியர் கண்ணீரை அடக்க இயலாமல் தன் நண்பரிடம் அந்த கட்டுரையை பகிர்ந்து கொண்டார். சிறுவனின் வேதனை மிகுந்த மன நிலையை உணர்ந்த நண்பர் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டார்.
ஊனமுற்ற தாய்க்கு பென்ஷன் 600 ரூபாய் வருகிறது. சிறு தோட்டத்தில் தாயும் மகனும் வேலை செய்கின்றனர். தற்போது மகாராஷ்டிரா அமைச்சர் ‘தனஞ்சய் முண்டே’ இந்த செய்தியை அறிந்ததன் மூலம் சிறுவனுக்கு உதவி கிடைத்துள்ளது.