கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ., வில்சனை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப் பட்ட துப்பாக்கி, எர்ணாகுளத்தில் உள்ள கழிவுநீர் ஓடையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலையத்தில், சிறப்பு எஸ்எஸ்ஐ.,யாக பணியாற்றியவர் வில்சன் (57). இவர் கடந்த 8ஆம் தேதி இரவு தமிழக- கேரள எல்லையில் உள்ள களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்தபோது, இரண்டு பேர் வில்சனை துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துவிட்டு, அருகில் இருந்த மசூதியை நோக்கி ஓடினர்.
கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த இந்தக் காட்சிகள் அப்போதே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தின. இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இதை அடுத்து, அந்த இருவரும் பயங்கரவாத தொடர்பில் இருந்ததும், கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில் அவர்கள் இருந்து வந்ததும் மேலும், அவர்கள் உடுப்பியில் இருந்து மங்களூர் வந்து, அங்கிருந்து நேபாளம் வழியாக தப்பித்துச் செல்ல இருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், அவர்கள் இருவரும் கன்னியாகுமரி மாவட்டம், அடப்புவிளையை சேர்ந்த அப்துல் சமீம், (வயது 29) நாகர்கோவில் கோட்டார் மாலிக் தினார் நகரை சேர்ந்த தவுபீக் (வயது 27) என அடையாளம் கண்டு அவர்களை கர்நாடக போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது, கொலை, கொலை மிரட்டல் மற்றும் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு பிரிவு என்ற, ‘உபா’ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும், கன்னியாகுமரி மாவட்ட போலீசார், 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, அவர்கள் இருவரையும் போலீசார் கேரளா அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, வில்சலை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கழிவுநீர் ஓடையில் வீசிவிட்டு சென்றதாகக் கூறினர். இதனையடுத்து அவர்கள் கூறிய இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், கழிவுநீர் ஓடையில் இருந்து துப்பாக்கியை மீட்டனர்.