தமிழகத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான பிரசாரம் ஜரூராக நடக்கிறது. இதனை மாநில அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அரசுப் பேருந்துகள், பயணிகள் ரயில்கள் போன்றவற்றில் இந்த பிரசாரம் தூள் பறக்கிறது.
கம்யூனிஸ்டுகள், நக்ஸல்கள் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இது போன்று பொதுமக்கள் கூடும் இடங்களில், அரசுப் பேருந்துகளில், ரயில்களில் ஏறி உண்டியல் அல்லது பிளாஸ்டிக் பக்கெட் வாளி என எடுத்துக் கொண்டு, அதில் கொஞ்சம் சில்லறை போட்டு குலுக்கிக் கொண்டு, அந்த சத்தத்தின் ஊடே, அரசுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கி விடுகின்றனர்.
உலக ஞானம் எல்லாம் பெற்றுக் கொண்டு, உலக அரசியலை ஒரு நொடியில் விளங்க வைத்து விடுபவர்கள் போல் பேசுபவர்களால் மக்கள் மனத்தில் அரசின் திட்டங்கள் குறித்த தவறான புரிதல்கள் சென்றடைகின்றன என்பதை மாநில அரசு புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் புரிந்தும் புரிந்து கொள்ளாத மாதிரி, அரசை மீதிக் காலமும் நடத்திச் செல்வதில் மட்டுமே குறியாக இருக்கிறது மாநில அரசு! இப்படி செயலற்ற அரசாக இருப்பதால், அரசு ஊழியர்களே, அரசுக்கு எதிரான பிரசாரத்துக்கு துணை போகின்றார்கள். அதற்கு உதாரணமான சம்பவம் இன்று காலை நடைபெற்றது.
இது குறித்து ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சுடசுட உடனடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்… நாள் 23 Jan 2020, நேரம் 12.35pm!
சென்னை சேலம் மார்க்கம், விழுப்புரம் பேருந்து நிலையம். பிரிவினைவாத அமைப்பு மக்கள் அதிகாரம், அரசாங்க பேருந்தில், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், தமிழக மற்றும் மத்திய அரசாங்கத்தை பற்றி, அவதூறாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.
இதற்கு, அரசு ஊழியரான பேருந்து நடத்துனர், நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்ததுமட்டும் இல்லாமல், கேள்விகேட்ட தகுந்த பயணசீட்டுடன் பயணிக்கும் என்னை, சாடுகிறார். என்னை பேருந்திலிருந்து இறங்குமாறு கூறுகிறார்.
அனைவருக்கும் கருத்து சுதந்திரம், நம் அரசியல் சாசனத்தில் கொடுக்கப்பட்டிருக்குது. அதை தவறாக பயன்படுத்தலாமா?? உங்கள் தரப்பு வாதத்தை, தக்க அனுமதிபெற்று, பொதுக் கூட்டங்கள் தெருமுனை பிரச்சாரங்கள் செய்யலாமே, அதை விடுத்து, ஏன் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டும்??
இது நியாயமா?? தமிழக அரசு, இதுபோன்ற தேசவிரோத பிரிவினைவாத, தீய அமைப்புகளை ஏன் இன்னும் தடைசெய்யவில்லை?? அரசு நடவடிக்கை எடுக்குமா?? – என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் என்பவர் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகிறது.