கர்நாடகாவில் நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் டி கொல்லஹள்ளி என்ற ஊரில், விமலா ஹிருதயா மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழாவை ஒட்டி மாணவிகள் சிலர் ஆடிடோரியத்தில் நடன ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒத்திகையில் ஈடுபட்டிருந்த 9ம் வகுப்பு மாணவி பூஜிதா திடீரென மயங்கி விழுந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி மாரடைப்பால் உயிரிழந்ததுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்றபோது, மயங்கி விழுந்த மாணவியை உடனடியாக சக மாணவிகள் எழுப்ப முயன்றபோது அங்கிருந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது இருக்கையில் பதற்றமின்றி அமர்ந்திருந்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஜல்லப்பா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வி. லக்ஷ்மையா இது குறித்து கூறிய போது, இது இயற்கையான மரணம்தான். அவளுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார். டாக்டர் லக்ஷ்மையாவின் சகோதரர் பேத்தி தான் இந்தப் பெண் என்பது குறிப்பிடத் தக்கது. .இருப்பினும், இதற்கு முன் அவள் தனக்கு நெஞ்சு வலி என்று சொன்னதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.