உலகத்தை இப்போது அச்சுறுத்தி வருகிறது கொரோனோ வைரஸ். சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனோ வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இப்படி ஒரு புதுவித வைரஸ் நோய் பரவும் என்று இந்த வருடத்தின் பஞ்சாங்கத்தில் முன்னரேயே கணிக்கப் பட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாங்கத் தகவல்கள் என்பவை, முன்னர் கணிக்கக் கூடியவை. இவற்றில் சில நடக்கலாம், சில நடக்காமல் போகலாம். ஆனால் இவ்வாறு நடக்க சாத்தியம் உள்ளது என்ற அனுமானத்தை பஞ்சாங்கத்தில் பதிவு செய்கிறார்கள். ஆனால் இவ்வாறு புதிய வைரஸ் நோய் மேற்கு திக்கில் இருந்து பரவும் என்ற இந்தக் கணிப்பு இப்போது, ஆச்சரியத்துடன் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸை தடுக்க முடியுமா? செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை என்ன ?
2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து உலகம் முழுவதும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. ஆனால், இதன் மூலம் எது என்று இது வரை அடையாளம் காணப் படவில்லை. எனவே, கொரோனா வைரஸை தாக்குப் பிடிக்கும் அளவு மனிதர்களுக்கு வழங்கக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட சீனாவின் வுஹான் நகரில் இருந்து தான் இந்த நோய் உலகிற்கு பரவி உள்ளதாகக் கூறப் படுகிறது. கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சலும், பிறகு வறட்டு இருமல் ஏற்பட்டு, ஒரு வாரத்திற்குப் பிறகு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
கொரோனோ வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாமல் தடுப்பதே சிறந்த வழி. இதற்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, முழு பாதுகாப்புக் கருவிகளுடன் கூடிய மருத்துவ பணியாளர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவ வேண்டும். இருமல் அல்லது தும்மும்போது துணியை வைத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும். இருமல் அல்லது மூக்கில் சளி பிரச்சனை இருந்தால் முகமூடி அணிய வேண்டும். உடனே மருத்துவரை நாட வேண்டும்.
விமானப் பயணத்தில், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அது குறித்து விமானக் குழுவினருக்குத் தெரிவிக்க வேண்டும். முகமூடி அணியவேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அல்லது சக பயணிகளுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும். இறங்கும் போது விமானக் குழு கூறும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
சீனாவிலிருந்து திரும்பிய ஒரு மாத காலத்திற்குள் நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் உங்கள் நோய் குறித்து அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் பயண விவரம் குறித்து சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
நோய்வாய்ப்பட்டால் பயணம் செல்ல திட்டமிட வேண்டாம். அவசியமில்லாத நிலையில் சீனாவுக்குப் பயணிக்க வேண்டாம். இருமல், மூக்கு ஒழுகல் போன்ற நோயின் அறிகுறி கொண்டவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.
சீனாவில் இறைச்சிக் கூடங்களில் இருந்தே மனிதருக்கு கொரோனோ வைரஸ் பரவியதாகக் கூறப்படுகிறது. சரியாக சமைக்காத இறைச்சி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். காய்கறிகளை சாப்பிடுவது நல்லது. இறைச்சி வெட்டப்படும் இடங்கள், விலங்குகள் கொல்லப்படும் இடங்கள், விலங்கு பண்ணைகள் போன்ற இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்து விட வேண்டும்.