செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை பிடுங்கிக் கொண்டார் சல்மான் கான்! வைரலாகிறது ஒரு வீடியோ.
தன் அனுமதியின்றி செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் கையிலிருந்த செல்போனை சல்மான் கான் பிடுங்கிச் சென்றார். சல்மான் கானின் இந்த செயலை சிலர் குற்றம் சாட்டினர். வேறு சிலர் ரசிகர் செய்ததுதான் தவறு என்று கானுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தன் அனுமதியின்றி செல்பி எடுக்க முயன்ற ரசிகருக்கு இவ்வாறு அதிர்ச்சி அளித்தார் இந்த பாலிவுட் ஹீரோ. கோவா விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
கோவாவில் சல்மான் கான் ராதே திரைப்பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக சென்ற வாரம் மும்பையில் இருந்து கோவா சென்றார். விமான நிலையத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த போது ஒரு ரசிகர் ஹீரோவோடு சேர்ந்து செல்ஃபி எடுக்க முயன்றார். ஆனால் கான் மிகக் கோபம் கொண்டு கண நேரத்தில் ரசிகரின் கையில் இருந்த போனை பிடுங்கிக் கொண்டு தன் வழியே சென்று விட்டார்.
அந்த ரசிகர் ஒரு விமான நிர்வாகத்தின் கடை நிலை ஊழியர் என்று தெரிகிறது. யாரும் புகார் அளிக்கவில்லை என்றாலும் வைரல் வீடியோ ஆதாரமாக தாம் நடத்திய விசாரணையின் போது சம்பவம் நடந்தது உண்மை என்று அறிந்தோம் என்று விமான நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செலிபிரிட்டிகளுக்கு தொல்லை கொடுப்பது சரியல்ல என்று சில நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். தனக்கு தொல்லை தந்த ரசிகருக்கு சல்மான் தகுந்த பாடம் கற்பித்தார் என்ற கருத்துகளும் கூடவே வருகின்றன.