சென்னையை அடுத்த செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடந்த ஜன.25ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட பிரச்னைக்குப் பின்னர் கடந்த நான்கு நாட்களாக எவ்வித நெரிசலும் இல்லாமல் ரொம்பவே ஃப்ரீயாக செல்கிறோம் என்று கூறியுள்ளனர் வாகன ஓட்டிகள்.
பரனூர் சுங்கச்சாவடியில் 4வது நாளாக தற்போது வாகனங்கள் சுங்க கட்டணம் இன்றி செல்கின்றன! கட்டணம் தொடர்பான மோதலில் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டதால் ஊழியர்கள் யாரும் பணியில் இல்லை என்பதால், வசூல் எதுவும் நடைபெறவில்லை. மேலும், சுங்கச்சாவடி சரியாக ஒரு வார காலம் பிடிக்கும் என்று முன்னர் தெரிவிக்கப் பட்டது.
இதை அடுத்து, சுங்கச்சாவடி பண வசூல் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது. வாகனங்கள் நிற்காமல் உடனே செல்வதால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சரியான நேரத்திற்கு செல்வதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தப் பட்டுள்ளதால், சுங்கச்சாவடியை நிர்வகிக்கும் நிறுவனத்துக்கு தினமும் 40 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.