திருச்சி பா.ஜ.க. பிரமுகர் கொலையில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி பாலக்கரை மண்டல பா.ஜ.க. செயலாளராக இருந்த விஜயரகு திங்கட்கிழமை மிட்டாய் பாபு என்ற முகம்மது பாபுவால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
லவ் ஜிகாத் விவகாரத்தில் விஜய ரகு கொல்லப்பட்டதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விஜய் ரகு குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மிட்டாய்பாபு என்ற முகம்மது பாபுவும் ஹரிபிரசாத்தும் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சச்சின் என்கிற சஞ்சய், முகமது யாசர், சுடர் வேந்தன் ஆகிய மூவரும் திருச்சி சஞ்சீவி நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, மிட்டாய் பாபு என்கிற முகமது பாபு பயங்கரவாதச் செயலின் ஓர் அங்கமாகவே விஜயரகுவை படுகொலை செய்திருப்பதாக கூறுகின்றனர் பாஜக.,வினர். எந்த இடத்தில் சிஏஏவுக்கு ஆதரவாக விஜயரகு நோட்டீஸ் தந்தாரோ, அதே இடத்தில்தான் பாஜக பிரமுகர் விஜயரகு கொல்லப்பட்டுள்ளார்.. இது குடும்ப தகராறு கிடையாது.. இது ஒரு ‘லவ் ஜிகாத்’ தாக்குதலாக கூட இருக்கலாம். அதனால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும்” என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.