சென்னை : களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை, தற்போது தேசிய புலனாய்வு முகாமை – என்ஐஏ.,வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த மாதம் 8ஆம் தேதி சுட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கொலை நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, வில்சனைக் கொலை செய்தவர்கள், அங்கிருந்த மசூதிக்குள் ஓடி ஒளிந்து கொண்டதும், அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதை அடுத்து, கொலை செய்த பயங்கரவாதிகள் அப்துல் ஷமீம் மற்றும் தவுபிக் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு, கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து மங்களூருக்கு தப்பிச் செல்லும் நிலையில் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஷேக் தாவூத் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அப்துல் ஷமீமுக்கு பண உதவி செய்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்துல் சமீம் மற்றும் தவுபிக் மீது உபா சட்டம் பாய்ந்தது. விசாரணையின் போது, பயங்கரவாதிகள் விவகாரத்தில் போலீசார் எடுத்துவரும் நெருக்கடி மற்றும் நடவடிக்கை காரணமாக அச்சுறுத்தவே இவ்வாறு கொலை செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விவகாரம் மாநில போலீசாரின் விசாரணை வரம்பையும் கடந்து செல்லும் நிலையில், எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கை, கன்னியாகுமரி தனிப்படை போலீசார் விசாரணை வசம் இருந்து என்.ஐ.ஏ.,வுக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.