புது தில்லி:
ஒவ்வொரு முறை எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போதும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என்று உத்தரவு வந்ததால், அந்த வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள், டிவி செய்திகள், என உலாவந்தது. ஆனால், இதில் உண்மையில்லை என எஸ்பிஐ வங்கி விளக்கமளித்துள்ளது.
ஏடிஎம் சேவைக் கட்டணம் உள்ளிட்டவற்றில் மாற்றங்களுடன் கூடிய புதிய விதிகளை எஸ்பிஐ வங்கி வரும் 1ம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், எனவே ஏடிஎம்மில் பணம் எடுக்க ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் வெளியான தகவலால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கி அளித்த விளக்கத்தில், ஏடிஎம் மூலம் பணம் பெறும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ரூ. 25 கட்டணம் வசூலிக்கப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை;
E-Wallet-ல் இருக்கும் பணத்தை வங்கி ஏடிஎம் மூலம் எடுப்பதற்கு மட்டுமே ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், ஏடிஎம் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கட்டணமின்றி பணம் எடுப்பதற்கான நடைமுறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது.