மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள பெரிய நாடான சீனாவில் ‘கொரோனா’ வைரஸ் வேகமாக பரவி வருவதால் இதுவரை 1,110 பேர் இதற்கு உயிர் இழந்துள்ளதாக சீன அரசு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. அதே நேரம், உயிரிழப்புகள் அதிகம் என்று உலக நாடுகள் கூறுகின்றன.
சீனாவை அடுத்து, அண்டை நாடுகளான ஜப்பான் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. சீனாவின் வூஹான் நகரில்தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,110 ஆக அதிகரித்துள்ளது என்று அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரசிற்கு ‘கோவிட் 19’ (COVID-19) என உலக சுகாதார நிறுவனம் (WHO) பெயரிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் நேரடியாக சீனா சென்று, கள நிலவரம் குறித்து அறிந்து கொண்ட பின்னர், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்! அதில், “நாவல் கொரோனாவுக்கு எதிராக உலகம் மிகத் தீவிரமாக செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்ட இயக்குநர் டெட்ராஸ் அதோனாம் கெப்ரேயேஸஸ் தொடர்ந்து, இந்த நாவல் கொரோனாவுக்கான பெயரையும் வெளியிட்டுள்ளார். அதன் பெயர், COVID – 19.
உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரேயேசஸ் கொரோனா வைரஸ் குறித்துக் கூறும்போது, கொரோனா வைரஸுக்கு கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் பூமியில் எந்தவொரு இடத்துக்கோ, மிருகத்துக்கோ, தனிநபருக்கோ, குழுவுக்கோ இதுவரை வைக்கப்படவில்லை. அதேநேரம் உச்சரிக்கக் கூடியதாகவும், நோய்க்கு தொடர்புடையதாகவும் இந்தப் பெயர் உள்ளது என்றார்.
இந்தப் பெயரில் வரும் CO என்பது, கொரோனாவின்(Corona) முதல் இரு எழுத்துகளையும், VI என்பது வைரஸின் (Virus) முதல் இரு எழுத்துகளையும், D என்பது நோயின் (Disease) முதல் எழுத்தையும் குறிப்பதாக விளக்கம் தந்தார். இறுதியாக உள்ள 19 என்ற எண், வைரஸ் கண்டறியப்பட்ட வருடத்தைக் குறிப்பது. டிசம்பர் 31, 2019 – ஆம் தேதியே உலக சுகாதார நிறுவனத்துக்கு வைரஸ் குறித்த தகவல்கள் வந்துவிட்டதால், அந்த ஆண்டையே அவர்கள் பெயரில் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸை தவறான பெயர்களைக் கொண்டு குறிப்பதைத் தடுக்கும் விதமாகவே இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் அவர்.
சீனாவில் கொரோனா வைராசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 99 சதவீதம் பேர் அவசர சிகிச்சைக் கட்டத்தில் உள்ளனர். கொரோனா வைரஸ் ஒருவகையில், சார்ஸ் வகை வைரஸ் குடும்பத்தை சார்ந்தது என்றுள்ளார் அவர்.