அண்மையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் பள்ளி மாணவிகள் மூவர் மது அருந்தும் வீடியோ வைரலானது. அதில் பள்ளிச் சீருடையில் மாணவிகள் மூவர், ஒரு பாட்டில் மதுரை கப்களில் ஊற்றி, பேசிச் சிரித்துக் கொண்டே சாராயத்த ஊத்து என பாடலும் பாடிய படி மது அருந்துகின்றனர்.
பார்த்தவர்களைப் பதைபதைக்க வைக்கும் வகையில் இருந்த இந்த வீடியோ, தமிழகத்தில் மதுக்கலாசாரம் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது என்பதைவெளிச்சம் போட்ட்டுக் காட்டியது. குறிப்பாக, பள்ளி மாணவர்களிடம் மது அருந்தும் கலாசாரம் பரவி வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களில் இது போன்ற மதுப்பழக்கத்தால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து பாமக., நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் அவ்வப்போது பதிவுகளைச் செய்து விழிப்பு ஏற்படுத்துவார். இந்த வீடியோவைக் கண்டு தனது உள்ளம் மிகவும் வேதனைப் படுவதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவிகள் சீருடையுடன் மது அருந்துவதாக காணொலி காட்சிகள் பரவி வருவது மிகவும் வேதனையளிக்கிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். மதுவில்லாத தமிழகம் தான் மாணவர் சமுதாயத்தையும், மக்களையும் காப்பாற்றும்!