ஆதின நிலங்களை ஆட்டைய போடும் திமுக: நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது புகார் மனு!
திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளம் கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் தி மு க நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப் பட்டது.
நெல்லை மாவட்டத்தில் திருவாவடுதுறை ஆதினத்துக்குச் சொந்தமாக உள்ள பல ஏக்கர் நிலங்களை, ஒழுங்காக குத்தகை செலுத்தாமலும், ஆக்கிரமிப்பு செய்தும் ஏமாற்றி வருபவர்கள், நெல்லை திமுக., எம்.பி., ஞானதிரவியம் மூலம் அந்த நிலங்களை தங்களுக்கே சொந்தமாக்கிக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதற்கு ஏற்ப ஞானதிரவியமும் அந்த நிலங்களை இலவசமாக பெற்றுத் தருவதாகக் கூறி, பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.
இந்த நிலையில் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், ஆதின சொத்துகளை திமுக., உறுப்பினர் ஆட்டையைப் போட்டு, அபகரிப்பதை எதிர்த்து, போராட்டங்களை நடத்தவுள்ளது. அதன் முதற்கட்டமாக, இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து, இது குறித்து மனு அளித்தது.
இந்நிலையில், ஆதினநிலங்களைஅபகரிக்கும்_திமுக என்ற டிவிட்டர் ஹேஷ் டேக்கும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
விஹெச்பி மாநில இணை செயலாளர் இறச்சகுளம் என்.காளியப்பன் பெயரிட்டு அளித்துள்ள அந்த புகார் மனுவில் கூறப் பட்டிருந்ததாவது…
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான சுமார் 8,000 ஏக்கர் நிலம் நெல்லை மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ளது. அதிலும் குறிப்பாக ஆவரைகுளம், அடங்கார் குளம், சௌந்தர லிங்கபுரம், மேலகடம்பன் குளம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மனைகளும் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களும் உள்ளன.
இவற்றில் பல ஏக்கர் நிலங்கள் ஆதீனத்திடம் முறையான அனுமதி இல்லாமலும் முறையான குத்தகை செலுத்தாமலும் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆதீனத்தின் அறிவிக்கப்படாத குத்தகைதாரர்கள் பல ஏக்கர் விளைநிலங்கள் மற்றும், ஆதீனத்துக்கு உரிமைப் பட்ட நஞ்சை புஞ்சை மற்றும் வீட்டுமனைகள் ஆதினத்திடம் ஒப்படைக்கப்படவும் இல்லை!
தற்போது நிலங்கள், வீட்டுமனைகளை முறையாக குத்தகைதாரர்கள் கொடுக்காத நிலையில், ஆக்கிரமிப்பாளர்களிடம் முறையான ரசீது வழங்கி சொத்துக்களை முறைப்படுத்த முயற்சி எடுத்தபோது, அதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் இந்த சொத்துக்களை முறைப்படி அனுமதி பெறவும் முறையான குத்தகை செலுத்தவும் விரும்பாமல், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்தை அணுகி கூட்டாக ஆதீனத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
நெல்லை நாடாளுமன்ற உறுப்பினரும் ஆதீன விதிகளுக்கு முரணாக ஆக்கிரமிப்பாளர்களுடன் சேர்ந்துகொண்டு ஆதீன சொத்துகளை அபகரிக்க துடிக்கின்றார். ஞானதிரவியம் தனது உறுப்பினர் பதவியை தவறாக பயன்படுத்தி சொத்துக்களை அவருடன் சேர்ந்த ஆதரவாளர்களுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இலவசமாக வழங்க மிரட்டி வருகிறார்.
ஆதீன சொத்துக்களை வரன்முறை செய்யாமலும் ஆக்கிரமிப்பாளர்களிடம் குத்தகை வசூல் செய்ய விடாமலும் செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இதுகுறித்து பலமுறை வருவாய்த்துறை மூலமும் காவல்துறை மூலமும் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அதனை ஞானதிரவியம் அவருடைய பதவியை பயன்படுத்தி அரசு துறைகளை செயல்பட விடாமல் தடுத்து வருகிறார்.
மேலும் பல பகுதிகளில் உள்ள ஆதீன சொத்துக்களை முறைகேடாக ஆக்கிரமிக்க ஆக்கிரமிப்பாளர்களை தூண்டி வருகிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆதின சொத்துகளின் மூலம், அரசு தீர்வைகளை திருவாவடுதுறை ஆதீன நிர்வாகமானது தொடர்ந்து செலுத்தி, வருவாய் துறைக்கு நல்ல வருவாயை ஏற்படுத்தித் தருகிறது.
ஆகவே தாங்கள் இதுகுறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுத்து ஆதீன சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.