சென்னை: மத மாற்றங்களுக்கான நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிபிஐ தன்னார்வ தொண்டு நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
தடை செய்யப்பட்ட கம்பேசன் இண்டர்நேஷனல், கொலராடோவைச் சேர்ந்த நன்கொடையாளரிடம் இருந்து சென்னையைச் சேர்ந்த என்.ஜி.ஓ.,வான கருணா பால் விகாஸ் கோடிக்கணக்கான ரூபாய்களை பெற்றது குறித்து, மத்திய புலனாய்வு அமைப்பு சிபிஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது.
மே 2016 இல் அரசின் அனுமதியின்றி இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு காம்பஷன் இன்டர்நேஷனல் நிதி அளிப்பதற்கு மத்திய பாஜக அரசு தடை விதித்தது.
அரசின் முடிவுக்குப் பிறகு, சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர். அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி 2017 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போதைய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து, மத்திய அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி அவருக்கு அழுத்தம் கொடுக்க முயன்றார்.
எனினும், மத்திய உள்துறை அமைச்சகம் சட்ட மீறலை சுட்டிக்காட்டி, கம்பேஷன் இண்டர்நேஷனல் மூலம் கருணா பால் விகாஸுக்கு வரும் கோடிக்கணக்கான பணம், இந்தியாவில் வலுக்கட்டாய மதமாற்றக் குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மெதடிஸ்ட் சர்ச், பாப்டிஸ்ட் சர்ச், சால்வேஷன் ஆர்மி, கிறிஸ்டியன் மிஷனரி சொசைட்டி, இன்டியன் பெந்தோகோஸ்டல் சர்ச் ஆகியவற்றுக்கு முறைகேடான வகையில், திசை திருப்பி விடப் படுவதாகக் கூறியது.
வெளிநாட்டு நிதி மத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியது அமைச்சகம்.
இந்த நிலையில் தான் கடந்த வாரம் சிபிஐ ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது! அதில், கம்பேஷன் இண்டர்நேஷனலை ஒரு குற்றம் சாட்டப்பட்ட அமைப்பாக குறிப்பிட வில்லை எனினும், வெளிநாட்டு பங்களிப்பு பதிவுச் சட்டத்தின் (எஃப்.சி.ஆர்.ஏ) கீழ் பதிவுசெய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம், வெளிநாட்டு நிதிப் பங்களிப்புகளின் கணக்கில் பொருளாதார, கல்வி மற்றும் சமூக சேவைக்கான வகையில் குறிப்பிடுகின்ற போதிலும், “தொடர்ந்து மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது” என்று சிபிஐ குற்றம் சாட்டியது. 2011-12 முதல் 2014-15 வரையிலான நிதி ஆண்டுகளில் இதன் வரவு செலவுக் கணக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
கருணா பால் விகாஸ் வெளிநாட்டு நிதிகளில் ஒரு பகுதியை மத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி உள்துறை அமைச்சகத்தின் எஃப்.சி.ஆர்.ஏ., பிரிவு புகார் அளித்தது.
“வருமான வரித் துறையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தணிக்கை, வெளிநாட்டு நிதியில் ஒரு பகுதி கருணா பால் விகாஸ் – சிபிவி (CBV) மூலம் மத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது. மேலும் ‘ஏழைக் குழந்தைகளை முழுமையடைந்த கிறிஸ்தவ பெரியவர்களாக மாற்றுவது’ என்ற தனது நீண்டகால நோக்கத்தை கருணா பால் விகாஸ் அறிவித்துள்ளது!
இதன் மூலம் கிறிஸ்தவத்திற்கு மாற்றங்கள் உள்ளிட்ட மத நடவடிக்கைகளில் அது ஈடுபட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளன. எனவே, அவை எஃப்.சி.ஆர்.ஏ, 2010 ஐ மீறுவதாகும் ”என்று சிபிஐ., எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.
“ஐடி துறையின் அறிக்கையின்படி, கருணா பால் விகாஸ், 10% வெளிநாட்டு நிதிப் பங்களிப்பை மட்டுமே தனக்கு பயன்படுத்தியது. மீதமுள்ள 90% நிதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 300 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எஃப்.சி.ஆர்.ஏ பிரிவில் பதிவு செய்யப்படவில்லை ”என்று எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப் பட்டுள்ளது.