காவல்துறை உளவுப்பிரிவு அதிகாரி அன்கித் சர்மா சந்தபாக் பகுதியில் இறந்து கிடந்தது கண்டுப்பிடிப்பு. ஏற்கெனவே ஒரு காவலர் இறந்த நிலையில் காவல் துறையை சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தில்லியின் சந்த்பாக் பகுதியில் நேற்று இரவு புலனாய்வுப் பிரிவு பணியாளர் ஒருவர் கல் வீச்சுக் கும்பலால் கொல்லப்பட்டார்! அவரது உடல் அங்குள்ள சாக்கடைக் கால்வாயில் போடப் பட்டதாக அவரது உறவினர் கூறியுள்ளார். கொல்லப்பட்ட அதிகாரியின் பெயர் அங்கித் சர்மா என்பதும், அவருக்கு வயது 26 என்றும் அடையாளம் காணப்பட்டது.
அங்கித் சர்மா ஐ.பி.யில் பாதுகாப்பு உதவியாளராகப் பணிபுரிந்தார். திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் தொடர்பாக வடகிழக்கு தில்லியில் நடந்த வன்முறைகளில் இதுவரை 20 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தில்லியின் நிலைமையை “ஆபத்தானது” என்று கூறியுள்ளார், மேலும் போராட்டங்களைத் தடுக்க இராணுவத்தை அழைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். அதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக முதல்வர் கூறினார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில், தில்லியில் நடந்த அக்கட்சியின் கூட்டத்தில், தில்லி வன்முறைகளுக்காக மத்திய அரசு மற்றும் தில்லி அரசு மீது குற்றம் சுமத்தியது. இயல்புநிலையை மீட்டெடுப்பதில் “பெரும் தோல்வி” ஏற்பட்டதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அக்கட்சி கோரியது.
இந்த வன்முறைகள் வழக்கம் போல் மசூதிகளில் தொழுகை நடைபெறும் வெள்ளிக்கிழமைக்குப் பிந்தைய இரவில் லேசாகத் தொடங்கி, சனிக்கிழமை ஜஃப்ராபாத், மௌஜ்பூர் மற்றும் வடகிழக்கு தில்லியின் பிற பகுதிகளில் தொடங்கி வார இறுதியில் வெடித்தது. குடியுரிமை (திருத்த) சட்டம், சி.ஏ.ஏ-க்கு ஆதரவாக கல்லெறி கும்பல்கள் தெருக்களில் இறங்கி, வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தி வன்முறை கோர தாண்டவம் ஆடிய போது, அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய குழுக்களும் பலத்த எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கின.
திங்கள், செவ்வாய்க் கிழமை என நடைபெற்ற இரண்டு நாள் வன்முறையில் அப்பகுதியில் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
புதன்கிழமை இன்று காலை ஜஃப்ராபாத் மெட்ரோ நிலையத்தின் கீழ் பிரதான சாலையில் இருந்து எதிர்ப்பாளர்கள் நகர்ந்து சென்றாலும், சந்த் பாக் மற்றும் கோகுல்பூரியின் இரண்டு வடகிழக்கு தில்லி இடங்களில் ஒரு புதிய வன்முறை வெறியாட்டம் நிகழத் தொடங்கியது. எதிர்ப்பாளர்கள் கற்களை வீசத் தொடங்கினர். ஆயினும் இது இந்தப் பகுதிகளில் போலீசாரால் ஒடுக்கப்பட்டது.