January 25, 2025, 7:55 AM
23.2 C
Chennai

வங்கக் கடலில் தமிழக மீனவர் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை: வங்கக் கடலில் தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற தமிழக மீனவர்களின் கோரிக்கையை ஏற்க அந்நாட்டு அரசு மறுத்து விட்டது. அதுமட்டுமின்றி, எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்களை கைது செய்யவும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்யவும் இலங்கை கடற்படைக்கு அந்நாட்டு அதிபர் சிறீசேனா ஆணையிட்டிருக்கிறார். அதன்படி, வங்கக்கடலில் மீன் பிடித்த நாகை மீனவர்கள் 33 பேரை 5 படகுகளுடன் சிங்களப்படை நேற்றிரவு கைது செய்துள்ளது. வங்கக் கடலில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பது தொடர்பான பிரச்சினை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்குப் பிறகு ஏற்பட்ட இச்சிக்கல் 1980 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தீவிரம் அடைந்தது. இக்காலகட்டத்தில் வங்கக் கடலில் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாகக் கூறி 800&க்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள்; ஏராளமான மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இருநாட்டு அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இரு நாட்டு மீனவர் அமைப்புகளே இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டனர். இரு நாட்டு மீனவர்களுக்கிடையே சென்னையில் கடந்த 24 ஆம் தேதி நடந்த மூன்றாம் கட்ட பேச்சுக்களின் போது, இலங்கை கடல் பகுதியில் ஆண்டுக்கு 83 நாட்களுக்கு மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் விடுத்த கோரிக்கையை இலங்கை மீனவர்கள் கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தான் உள்நாட்டு அரசியல் அழுத்தத்தை சமாளிப்பதற்காக தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் இந்த அறிவிப்பை இலங்கை அதிபர் வெளியிட்டிருக்கிறார். இந்தியா & இலங்கையைப் பொறுத்தவரை கடல் எல்லையை பிரித்துப் பார்க்க முடியாது; அப்படிப் பிரித்துப் பார்த்தால் மீனவர்கள் பிழைப்பு நடத்த முடியாது என்பது தான் உண்மை. இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் பரப்பு மிகவும் குறுகியது. இராமேஸ்வரம் பகுதியிலிருந்து 12 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடல் எல்லை வந்து விடும். ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் தான் விசைப்படகுகள் மீன் பிடிக்க முடியும் என்பதால் பல நேரங்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளும் நுழைவது தவிர்க்க முடியாதது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எந்த அளவுக்கு கைது செய்யப்பட்டு இருக்கிறார்களோ, அதில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இலங்கை மீனவர்களும் இந்திய கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்ற புள்ளிவிவரமே இதை உணர்த்தும். இந்த உண்மையை உணராமல் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் சுட்டுக் கொல்வோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மிரட்டுவதும், வங்கக் கடலில் மீன்பிடிப்பதற்கான தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை இலங்கை அதிபர் சிறீசேனா மறுப்பதும், அதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 33 பேர் அவர்களின் படகுகளுடன் கைது செய்யப்பட்டிருப்பதும் ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. இது மீனவர்கள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குமே தவிர தீர்க்க உதவாது. வங்கக்கடலில் காலம் காலமாக தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் நட்புடன் மீன்பிடித்து வந்துள்ளனர். சர்வதேச வழக்கச் சட்டங்களின்படி (Customary international laws) பாரம்பரிய உரிமைகள் சட்டப்படி செல்லும். அந்த அடிப்படையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள வங்கக்கடலில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு உண்டு. இதை இந்தியா வலியுறுத்திக் கேட்கும்போது அதை இலங்கை அதிபராலோ, இலங்கைப் பிரதமராலோ ஒருபோதும் மறுக்க முடியாது. ஆனால், இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இந்திய அரசு மறுப்பது தான் வேதனையான உண்மை ஆகும். ஐக்கிய நாடுகள் அமைப்பால் உருவாக்கப்பட்ட சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) முறையிட்டு இந்த உரிமையை நிலைநிறுத்த முடியும். மேலும், வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கைக் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச காவல்துறை மூலம் மேற்கொள்வதன் மூலம் இந்த பிரச்சினையில் இலங்கையை வழிக்கு கொண்டு வர முடியும். எனவே, இலங்கை மீது கருணை பார்வை காட்டுவதை விடுத்து, அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்கான சட்டபூர்வ உரிமையை தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும். அத்துடன் கைது செய்யப்பட்ட மீனவர்களை அவர்களின் படகுகளுடன் மீட்கவும் மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ALSO READ:  தமிழகத்தின் தொன்மை வரலாறு அறியாத அநாகரீக துணை முதல்வர்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!