மலையாள சினிமாவில்… நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து கிண்டல் அடித்த சர்ச்சையிலும், தமிழ் பிராமணர்கள் மாட்டு மாமிசம் தின்பது போல் பதியவைத்தும், சினிமாவில் வலுவில் காட்சி வைத்ததால், மம்முட்டி மகன் துல்கர் சல்மானுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
பிரபாகான் என்று பெயர் வைத்த விவகாரத்தில் படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டதோடு தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்!
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் நடிகர் மம்முட்டியின் மகன் நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த ‘வரனே ஆவிஷ்யமுண்டு’ என்கிற படம் வெளியானது. சென்னையிலேயே எடுக்கப்பட்ட படம். சுரேஷ்கோபி, ஷோபனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் சுரேஷ்கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என பெயரிடப் பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயர் உலகம் முழுதுமுள்ள தமிழர்கள் பலர் அறிந்த பெயர். இன்னமும் சிலர் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு வேலு என்றும் பிரபாகரன் என்றும் அபிமானத்துடன் வைத்துவருகின்றனர். அந்தப் பெயரை நாய்க்கு வைத்ததன் மூலம் தமிழர்களை இழிவுபடுத்தி விட்டார் என துல்கர் சல்மானையும், படத்தின் இயக்குனர் அனூப் சத்யனையும் தமிழ் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
படம் வெளியாகி இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வரவில்லை. ஆனால் அண்மையில், ஒடிடி தளத்தில் இந்தப் படம் வெளியானபோது தமிழ் ரசிகர்கள் பலரும் இதைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன்மூலம் தான் பிரபாகரன் என்கிற பெயர் நாய்க்கு வைக்கப்பட்டுள்ளதும் பரவலானது.
ஆயினும் இந்த விவகாரத்தில் துல்கர் சல்மான் தனது டிவிட்டர் பதிவில், ‘வரனே ஆவிஷ்யமுண்டு’ படத்தில் வரும் பிரபாகரன் நாய் கேரக்டர் தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகச் சிலர் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அது உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டதல்ல. பழைய மலையாளப் படமான ‘பட்டண பிரவேஷம்’ படத்தில் வரும் நகைச்சுவை அது. கேரளாவில் அது பொதுவான ஒரு பெயர். எனவே, படத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் யாரையும் குறிப்பிடுவது அல்ல. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலரும் படத்தைப் பார்க்காமலேயே வெறுப்பைப் பரப்ப முயல்கின்றனர். என்னையோ, என்னுடைய இயக்குநர் அனூப்பையோ வெறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இதை எங்கள் அளவில் வைத்துக் கொள்ளலாம். எங்கள் தந்தையரையோ அல்லது மூத்த நடிகர்களையோ இதில் இழுக்க வேண்டாம்.
இதனால் காயப்பட்டதாக உணரும் அன்பான அனைத்துத் தமிழ் மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் மூலமாகவோ படங்கள் மூலமாக யாரையும் காயப்படுத்த நினைத்ததில்லை. இது உண்மையில் ஒரு தவறான புரிதல். உங்களில் சிலர் எங்களோடு சேர்த்து எங்கள் குடும்பத்தையும் வன்மத்துடன் திட்டி, மிரட்டி, அவமானப்படுத்தி வருகிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம் என்று விரும்புகிறேன்… என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆயினும், தமிழ் பிராமணர்களைக் கேவலமாக சித்திரித்ததற்கு எந்தப் பேச்சும் எழவில்லை! காரணம் அவர் பெயர் தான் துல்கர் சல்மான் ஆயிற்றே!