சமீபத்தில் டிக்டாக் விடியோ ஒன்றில் ஒருவர் இத்தவலைப் பரிமாறினார். அதாவது, ஏப்ரல் 23 அன்று தில்லியில், கரோனா நெருக்கடியால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாழும் ஒரு பகுதிக்கு டிரக் ஒன்று வந்ததாகவும் அதில் ஏராளமான 1 கிலோ கோதுமை மாவுப் பொட்டலங்கள் இருந்ததாகவும் மக்களுக்கு அவை வழங்கப்பட்டதாகவும் கூறினார். 1 கிலோ பொட்டலம் என்பதால் பலரும் அதை வாங்காமலும் சென்றுள்ளார்கள். பொட்டலத்தை வாங்கியவர்கள் வீட்டுக்குச் சென்று அதைப் பிரித்துப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்கள். ஒவ்வொரு மாவுப் பொட்டலம் ஒன்றிலும் ரூ. 15,000 வைக்கப்பட்டிருந்ததாக இச்சம்பவம் குறித்து டிக்டாக்கில் ஒருவர் விடியோ வெளியிட்டார்.
மேலும், அந்த விடியோவில் பேசியவர், இதை நடிகர் அமீர் கான் தான் செய்துள்ளார் என்றும் கூறினார். தேவை உள்ளவர்கள் மட்டுமே கோதுமை மாவுப் பொட்டலத்தை வாங்குவார்கள். அதனால் தான் அந்தப் பொட்டலங்களில் பணம் வைக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த விடியோவின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் அந்தக் கோதுமை மாவுப் பொட்டலத்தை தான் வழங்கவில்லை என நடிகர் அமீர் கான் கூறியுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ட்வீட்டில் அவர் கூறியதாவது:
பணம் வைக்கப்பட்டிருந்த கோதுமை மாவுப் பொட்டலத்தை நான் வழங்கவில்லை. அது பொய்யான செய்தியாகவும் இருக்கலாம். அல்லது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத ராபின் ஹுட்டாகவும் அவர் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
Guys, I am not the person putting money in wheat bags. Its either a fake story completely, or Robin Hood doesn't want to reveal himself!
— Aamir Khan (@aamir_khan) May 4, 2020
Stay safe.
Love.
a.